tamilnadu

img

கோவில் நிலத்தில் பல தலைமுறைகலாக விவசாயம் செய்யும் விவசாய குடும்பங்களை வெளியேற்றுவதை கைவிட வலியுறுத்தல்

கோவில் நிலத்தில் பல தலைமுறைகலாக விவசாயம் செய்யும்  விவசாய குடும்பங்களை வெளியேற்றுவதை கைவிட வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, மே 30-  திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சிதம்பரம், புறநகர் மாவட்டச் செயலாளர் நடராஜன், மாவட்டத் துணைச் செயலாளர் குருநாதன், ஒன்றிய நிர்வாகி கருணாநிதி, மாவட்டக்குழு உறுப்பினர் செல்லதுரை, மாநகர் மாவட்டத் தலைவர் தனபால், விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் குமார், சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் முருகேசன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சிதம்பரம், மாவட்டச் செயலாளர் நடராஜன் ஆகியோர் பேசுகையில், கடந்த டிசம்பர் மாதம் தொடர்ந்து பெய்த பெருமழையால் திருவெறும்பூர் பகுதிக்குட்பட்ட பத்தாளபேட்டை, கிளியூர், அரசங்குடி, விளாங்குளம், நடராஜபுரம், தேவராயநேரி, தொண்டாம்பட்டி, கூத்தைப்பார் உள்ளிட்ட பகுதிகளில் நடவு செய்த பயிர்கள் மிகவும் பாதிப்படைந்தன.  மேற்படி பாதிக்கப்பட்ட பகுதிகளில் திருவெறும்பூர் வட்டம் வருவாய் துறை மற்றும் வேளாண்மைதுறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்தனர். சுமார் 700 ஏக்கர் சாகுபடி பாதிப்பு உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு கணக்கு கொடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், தற்போதுவரை பாதிப்புக்கு நிவாரணம் வழங்கவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.  எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நிவாரணம் அல்லது பயிர் இன்சூரன்ஸ் வழங்கி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். ஓமாந்தூர் ஏரியில் உள்ள கருவேல மரங்களை அகற்றி  தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். ஓமாந்தூர் பகுதியில் காட்டுப் பன்றிகள், குரங்கு போன்ற காட்டு விலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். பின்னர், இதுகுறித்த மனுவை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தனர். முன்னதாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அடிமனை பயனாளிகள் மற்றும் குத்தகை விவசாயிகள் சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.  அந்த மனுவில், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள பூர்வத்தி கோவிலுக்குச் சொந்தமான 210 ஏக்கர் நிலத்தில் 100 விவசாயிகள் தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது அந்த இடத்தை அறநிலையத்துறை சார்பில் ஏலம் விடுவதாக கூறி நோட்டீஸ் வழங்கப்பட்டு அங்குள்ள விவசாயிகளை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே அறநிலையத்துறை இத்தகைய முயற்சியை கைவிட வலியுறுத்தியும், இதில், மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் கூறியிருந்தனர்.