லக்னோ, ஜூலை 5- இந்துக் கடவுள்களின் படமிருந்த செய்தித் தாளில் இறைச்சியைப் பொட்டலம் கட்டிக் கொடுத்து விட்டார் என்பதற்காக, முஸ்லிம் வியாபாரி மீது கொலை முயற்சி உட்பட 3 பிரிவுகளில் வழக்கு போட்டு, உ.பி. பாஜக அரசு கைது செய்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் பகுதியைச் சேர்ந்தவர் தலீப் உசேன். அப்பகுதியில் கோழி இறைச்சிக் கடையை நடத்தி வருகிறார். வழக்கமாக இவர் தனது வாடிக்கையாளர்களுக்கு சிக்கனை, பழைய செய்தித்தாள்களைப் பயன்படுத்தி, பொட்டலமாக கட்டி வழங்குவது வழக்கம். அந்த வகையில், கடந்த ஜூலை 3-ஆம் தேதியும், பழைய செய்தித்தாளில் கோழிக்கறியை பொட்டலமாக கட்டிக் கொடுத்துள்ளார். இந்நிலையில், அன்றைய தினம் பொட்டலம் கட்டிக் கொடுத்த செய்தித்தாள்களில் இந்துக் கடவுள்களின்புகைப்படங்கள் அச்சிடப்பட்டு இருந்ததாகவும், இதன்மூலம் முஸ்லிமான தலீப் உசேன்,
இந்துக் கடவுள்களை அவ மதித்து விட்டதாகவும் சர்ச்சை கிளப்பப் பட்டு இந்துத்துவா கூட்டத்தினரால் காவல் துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் தலீப் உசேன் கடைக்குச் சென்று விசாரணை நடத்தி யுள்ளனர். அப்போது, நான் வழக்கமான முறையில் தான் செய்தித்தாளில் இறைச்சியைக் கட்டிக் கொடுத்தேன். அதில் கடவுள் படங்கள் இருந்ததையே கவனிக்கவில்லை. மற்றபடி எந்த கடவுளையும் அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை என்று தலீப் உசேன் விளக்கம் அளித்துள்ளார். எனினும், தலிப் உசேனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், இந்திய தண்டனை சட்டம் 153ஏ (மதம், இனத்தின் அடிப்படையில் பகைமையை தூண்டுதல்), 295ஏ (வேண்டுமென்றே மத உணர்வுகளை அவமதித்து சீற்றத்தை ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், விசாரணைக்கு சென்றபோது, தலீப் உசேன் காவல்துறையினரை கத்தியால் குத்த முயன்றதாக ஐபிசி 307 (கொலை முயற்சி பிரிவின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.