tamilnadu

வீடியோ வெளியிடும் குடும்பத்தினரை மிரட்டும் உ.பி., பாஜக அரசு

கும்பமேளாவிற்கு சென்ற தங்கள் குடும்பத்தினரை காணவில்லை என சமூகவலைத்தளங்களில் 50க்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. பஞ்சாப்பைச் சேர்ந்த பெண் ஒருவர், “கும்பமேளாவிற்கு சென்ற எனது குடும்ப உறுப்பினர்கள் தொடர்பின்றி உள்ளனர். எனது குடும்ப உறுப்பினர்கள் பற்றி தகவல் அளிக்க உத்தரப்பிரதேச அரசு மறுத்து வருகிறது” என குற்றம் சாட்டினார். இவ்வாறு பல்வேறு வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கும்பமேளா குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பியதாக 8 பேர் மீது உத்தரப்பிரதேச காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து உத்தரப்பிரதேச காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “கும்பமேளா விழாவை “மரண விழா” என்றும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்துவிட்டதாகவும், அவர்களின் உறவினர்கள் பிரேத பரிசோதனை கிடங்கில் இருந்து உடல்களை சுமந்து செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் ஒரு வீடியோ வெளியாகியது. ஆனால் இந்த  வீடியோ போலியானது. அதனால் 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என அவர் கூறினார். ஆனால் காணாமல் போனதாக வீடியோ வெளியிடும் குடும்பத்தினரை மிரட்டவே உத்தரப்பிரதேச பாஜக அரசு வழக்குப் பதிந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.