tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் - உடுமலை நாராயணகவி பிறந்தநாள்

உடுமலை நாராயண கவி 1899  செப்டம்பர் மாதம் 25ஆம் நாள் பிறந்தார். விடு தலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர்; முத்துசாமிக்கவிராயரின் மாண வர்; ஆரம்ப காலத்தில் நாடகங்களுக்கு பாடல் எழுதினார். இவருடைய பாட்டுகள் நாட்டுப்புற இயலின் எளிமையையும், தமிழ் இலக்கியச் செழுமையையும் கொண்டிருந்தன. 1933-ல் திரைப்படங்களுக்கு பாடல் எழுத ஆரம்பித்தவர். நாராயணகவி என்று பெயர் சூட்டிக்கொண்டார். கவிஞர் இனமென்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவர். ஆரம்பத்தில் ஆன்மீகப் பாடல்களை எழுதிய நாராயணகவி, மகாகவி பாரதியாரின் நட்புக்குப்பின் பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப் பாடல்களை எழுதி அதன் மூலம் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பினார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு `கிந்தனார்’ கதாகாலட்சேபம் எழுதியதால் கலைவாணரின் குருவாக விளங்கியவர். அறிஞர் அண்ணா எழுதிய வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி போன்ற படங்கள், கலைஞர் கருணாநிதி கதை வசனம் எழுதிய பராசக்தி, மனோகரா திரைப்படங்கள்  போன்ற படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர். ஏறத்தாழ பத்தாயிரம் பாடல்களை எழுதியுள்ளார் நாராயணகவி.  நேர்மையும், சொல்திறமையும் மிக்கவர். எவ்வகையிலும் தலை வணங்காத உறுதி உடையவர். பிறருக்கு உதவுகின்ற மனம் படைத்தவர்.  கவிராயரின் பாடல்கள் மக்கள் மனங்களை ஈர்த்து அவர்களின் உள்ளங்களில் தனியிடத்தைப் பெற்றன. ‘கலைமாமணி’ என்னும் பட்டம் பெற்றார். தமிழும் இசையும் உள்ளவரை சாகாவரம் பெற்ற பாடல்களை எழுதிய உடுமலை நாராயணகவி தம் 82வது வயதில் மறைந்தார்.

- பெரணமல்லூர் சேகரன்

;