tamilnadu

img

சனாதன சக்திகளுடன் ஒட்டோ, உறவோ கிடையாது: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

எந்தக் காலத்திலும், எந்தச் சூழலிலும் திமுக தனது கொள்கைகளை விட்டுக் கொடுக்காது என்றும் பாஜக-வுடன் எந்த சமரசம்  கிடையாது என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடை பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன் மணி விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியது  வருமாறு: பெரியாரும், கலைஞரும் அவர்களுக்காக வாழவில்லை. தமிழகத்துக்காக, தமிழ் மக்களுக்காக வாழ்ந்திருக்கிறார்கள். அதைப் போலத்தான் திருமாவளவனும் இந்தத் தமிழ்ச் சமூகத்துக்காக, பழங்குடிச் சமூகத்தின் மேன்மைக் காக, உரிமைக்காக நீண்ட காலம் வாழ்வார், வாழ வேண்டும்.

கருத்தியல் கூட்டணி...

‘தம்பி உடையான் படைக்கு அஞ்சான்’ என்று சொல்வதைப் போல, எங்களுக்கு பலமாக இருக்கக்கூடியவர்தான் திருமா. இதனை  ஏதோ அரசியலுக்காக, தேர்தலுக்காக என்று  யாரும் நினைத்துக்கொள்வதற்கு அவசியமே கிடையாது. திமுகவும் விடுதலைச் சிறுத்தைக ளுக்கும் இருப்பது தேர்தல் நட்பு மட்டுமல்ல, அரசியல் நட்பு மட்டுமல்ல. அது கொள்கை உறவு. இரண்டு கருத்தியல்களின் கூட்டணி. அதனால்தான் இதனை யாராலும் பிரிக்க முடியாது. தேர்தல் நட்பு என்றால் தேர்தலோடு முடிந்து போயிருக்கும். வெற்றிக்குப் பிறகும்  நாங்கள் ஒன்றாக இருக்கிறோம், ஒருதாய்ப் பிள்ளைகளாக இருக்கிறோம். ஒரே கொள்கையை இரண்டு இயக்கங்களின் மூலமாகச்  செயல்படுத்த நினைத்துக் கொண்டிருப்பவர்கள். அதனால் நம்மை யாரும் பிரிக்க முடியாது. தேர்தல்கள் வரும், போகும். ஆனால், இயக்கங் கள் இருக்கும். கொள்கைகள் இருக்கும். கருத்தியல்கள் இருக்கும். இலக்குகள் இருக்கும்.

இரு தினங்களுக்கு முன்பு பத்திரிகை பேட்டி ஒன்றில் “ஆரியத்துக்கு எதிரான அனைத்தும் திரா விடம்தான் என்று புரிந்து கொள்ளலாம்” என்று திருமா சொல்லியிருக்கிறார். இந்த ஆட்சியைப் பார்த்தால் பலருக்கு ஏன் கசக்கிறது என்றால், இதனால் தான். “பெரியாரை எதிர்க்கக் கூடிய சக்திகள் திமுகவையும் தொடர்ந்து எதிர்க்கிறார்கள்” என்றும் அந்தப் பேட்டியில் சொல்லியிருக்கிறார். நாங்கள் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பதால்தான் பெரியாரை எதிர்க்கக் கூடிய  சக்திகள் இன்றைய திமுக அரசை எதிர்க் கிறார்கள். இதனையும் மிகச் சரியாக நம்முடைய திருமா குறிப்பிட்டு காட்டியிருக்கிறார். திமுகவுக்கு அறிவுரையாகவும், திருமா ஒன்றை குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். அதைச் சொல்வதற்கு அவருக்கு எல்லா உரிமை களும் உண்டு. அதை மனப்பூர்வமாக நான் ஏற்றுக் கொள்கிறேன். “பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு களிடம் குறைந்தபட்ச சமரசத்தை திமுக கையாண்டால் கூட, திமுக அணியில் பாஜக எதிர்ப்பு என்பது மெல்ல மெல்ல நீர்த்துப் போய் விடும் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், தி.மு.க.வைப் பொறுத்தவரை தனது கொள்கை யில் எப்போதுமே உறுதியாக இருக்கும் சகோதரர் கூறுவது போல் “குறைந்தபட்ச” சமரசத்தைக் கூட திமுக செய்துகொள்ளாது.

சமரசத்திற்கே இடமில்லை...

நான் தில்லி செல்வதைப் பற்றி வீரமணி இங்கு சூசகமாக சுருக்கத்தோடு குறிப்பிட்டார். காவடியா தூக்கப் போகிறேன். கை கட்டி, வாய் பொத்தி, உத்தரவு என்ன என்றா கேட்கப்  போகிறேன்? கலைஞர் பிள்ளை நான். உறவுக்குக்  கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப் போம், என்பதை மனதில் நினைத்துக் கொண்டிருப்பவன் நான். தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில், ஒன்றிய அரசிடம் பேசி, தமிழகத்திற்கு, தமிழ்நாட்டு  மக்களுக்குத் தேவையான திட்டங் களைப் பெறவேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையில் உறவு இருக்கிறதே தவிர, திமுகவிற்கும், பாஜகவிற்கும் அல்ல. திமுகவின் கொள்கைக்கும், பாஜக கொள்கைக்கும் எந்த உறவும் கிடையாது திருமா கொஞ்சம் கூட, கிஞ்சிற்றும் நீங்கள் கவலைப்பட வேண்டாம். எந்தக் காலத்திலும், எந்தச் சூழலிலும் திமுக கொள்கைகளை இந்த ஸ்டாலின் விட்டுக் கொடுக்கமாட்டான். திருமா கூறுவதுபோல், குறைந்தபட்ச சமரசமும் செய்து கொள்ளமாட்டான் இந்த ஸ்டாலின், உங்கள் சகோதரன் நான் என்று உரிமையோடு இதை  சொல்ல விரும்புகிறேன். இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சி என்று இந்த ஆட்சியை கூறுகிறோம்.  ஆகவே, திமுகவின் கொள்கை முழக்கம்தான் இது. அந்த முழக்கம் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் என்று இந்த மேடையின் வாயிலாக நான் தெரிவிக்க விரும்புகிறேன்.

தந்தை பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாகவும், அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாகவும், அனைத்துச் சாதியின ரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் போட்டதும்,  பெண்களும் அர்ச்சகராக வழிவகை செய்ததும், இடஒதுக்கீடு என்ற சமூகநீதிக் கொள்கையில் உறுதியாக இருப்பதும், இந்தியா என்பது மாநி லங்களின் ஒன்றியம்தான் என்று சொல்வதும், திரும்ப, திரும்ப நாம் எடுத்துச் சொல்வதும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டதும் இதனால்தானே! இன்னும் பலவற்றை என்னால் எடுத்துக்காட்டாகச் சொல்ல முடியும். இதனால்தான் சனாதனவாதிகளால், வகுப்பு வாதிகளால் இந்த அரசு அதிகப்படியான தாக்கு தலுக்கு உள்ளாகிறது. குறிப்பாக நான் அதிகப் படியாக அவர்களால் விமர்சிக்கப்படக்கூடிய சூழலுக்கு வந்திருக்கிறேன். அவ்வளவுதானே தவிர வேறு அல்ல. நாம் உருவாக்க நினைப்பது, “யாதும் ஊரே  யாவரும் கேளிர்... ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சங்ககாலத் தமிழகம். சங்க காலத் தமிழகத்துக்கு எதிரானதுதான் சனாதன சக்திகளின் சங்கத்துவம். அதனை நாம் ஒன்றி ணைந்து வீழ்த்துவோம்.  இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.

 

;