போகும் வழியில் சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது சித்தன்ன வாசல். இது தென்னிந்தியாவின் அஜந்தா குகை என்று அழைக்கப்படுகிறது. இந்த ஊர் அன்னவாசலுக்கு முன்னதாகவே உள்ளது. சித்தன்ன வாசலுக்கு நாம் பேருந்தை விட்டு இறங்கி 2 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டும். இந்த மலை வடக்கு - தெற்காக அமைந்துள்ளது. அன்ன வாயில் என்பது தற்போது “அன்னவாசல்’ என்று அழைக் கப்படுகிறது. அன்னவாசலின் முற்பகுதிதான் சித்தன்ன வாசல். இந்த இரண்டு ஊரும் சுமார் 2030 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான ஊராகும். “சித்தானம் வாசஹ்’ என்னும் வடமொழி சொற்களிலிருந்து இப்பெயர் வந்தது என்கின்றனர் ஆய்வறிஞர்கள். இதற்கு “துறவிகள் இருப்பிடம்’ என்பது பொருளாகும். “அண்ணல் வாயில்’ என்னும் பெயர் திருநாவுக்கரசரின் திருத்தாண்டகத்தில் காணப்படுகிறது.
சித்தன்னவாசல் ஓவியங்கள் 7-ஆம் நூற்றாண்டில் (கி.பி.600 - 630) சிம்மவிஷ்ணுவின் மகன் மகேந்திர வர்மனால் வரையப்பட்ட ஓவியங்கள் என்று சொல்லப்படுகிறது. பல்லவர் காலத்துக்கு முன் கோயில்கள், செங்கற்களா லும், மரத்தாலும், மண்ணாலும், உலோகங்களாலும் கட்டப்பட்டு வந்தன. குகைக் கோயில்களையும் - குட வரைக் கோயில்களையும் தமிழகத்தில் முதன்முதலில் அமைத்தவர் மகேந்திரவர்மன்தான். இவர் பின்னர் சமண மதத்திலிருந்து சைவ மதத்திற்கு மாறியவர் ஆவார். சித்தன்னவாசல் சமண மத மையமாக இருந்ததை இங்குள்ள கல்வெட்டுகளும் இவ்வூரைச் சுற்றியுள்ள பழமையான சமண சின்னங்களும் புலப்படுத்துகின்றன. அக்காலத்தில் காஞ்சி மாநகர் புத்தமத மையமாக விளங்கி யதுபோல் சித்தன்ன வாசல் சமண மத மையமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மலையின் மேல் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மலை மேல் ஏறி கிழக்குப் பக்கமாக வந்தால் சமணர் படுக்கை உள்ளது. மொத்தம் 7 படுக்கைகள் இங்கு உள்ளன. தலை வைத்துக்கொள்ள தலையணைபோல் மேடாகச் செதுக்கி வைத்துள்ளனர். குகை என்பது இயற்கையில் அமைந்த தாழ்வாரம் மாதிரி உள்ளது. பாறையில் 6 அங்குல ஆழத்திற்கு வழவழப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது. இந்தப் படுக்கைகளில்தான் சமண முனிவர்கள் படுத்துறங்கினர் என்று சொல்லப்படுகிறது. பாறை படுக்கைகளில் பிராமி எழுத்தில் எழுதப்பட்ட தமிழ் மொழிக் கல்வெட்டு உள்ளது. கி.பி. 8-9-ஆம் நூற்றாண்டுகளுக்குரிய தமிழ் எழுத்துகளால் பொறிக் கப்பட்ட சமணத் துறவிகளின் பெயர்களும் அதில் உள்ளன. இப்பகுதி “ஏழடிப்பட்டம்’ என்று அழைக்கப் படுகிறது. கி.பி.10-ஆம் நூற்றாண்டு வரை சமண முனிவர்கள் இந்தக் குகையில் தங்கியிருந்திருக்க வேண்டும் என்ப தற்கு இங்குள்ள கல்வெட்டுகளே சான்றாக உள்ளன. கோயிலுக்குச் செல்லும் பிரிவு சாலையின் கிழக்குப் பகுதியில் அக்காலத்தில் இறந்தவர்களைப் புதைப்ப தற்குப் பயன்படுத்திய கல்லறைகளும் - முதுமக்கள் தாழியும் காணப்படுகின்றன. ஆடல் - பாடல் - நாடகம் - ஓவியம் - சிற்பம் போன்ற கலைகள் பல்லவர் காலத்தில் சிறப்புப் பெற்றிருந்தன. மன்னன் குணபரன் ஓவியத்தி லும், சிற்பக்கலையிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். “சித்திரகாரப்புலி” என்னும் பெயரும் இவருக்கு உண்டு. “தட்சண சித்திரம்’ என்னும் ஓவிய நூலுக்கு இவர் உரை எழுதியிருப்பதாக வரலாறு கூறுகிறது.
குகையின் கூரை உட்புறத்தில் உள்ள ஓவியங்கள் உருவத்திலும், நிறத்திலும் சிறந்து காணப்பட்டபோதிலும் 3 ஓவியத் தொகுதிகள்தான் குறிப்பிடத்தக்கனவாகும். அரசன், அரசியின் முன்னால் நடனமாடுகின்ற பெண்களை இந்த ஓவியங்கள் சித்தரிக்கின்றன. அரசனது தலையில் சிறந்த வேலைப்பாடுகள் கொண்ட மணிகள் பதிக்கப்பட்ட மணிமகுடமும், அவரது கழுத்தில் மணிகள் பதித்த மாலை களும் காணப்படுகின்றன. காதுகளில் குண்டலங்கள் தொங்குகின்றன. அரசியின் தலையில் ஒருவகை மணிமகு டம் அழகாகச் செய்யப்பட்டுள்ளது. காதுகளில் வளை யங்கள் காணப்படுகின்றன. அந்த அரசனும், அரசியும் மகேந்திரவர்மனும் அவருடைய மனைவியும் என்று ஒரு சாரார் கூறுகின்றனர். ஸ்ரீவல்லப பாண்டியனும், அவர் மனைவியும்தான் அந்த ஓவியத்தில் உள்ளனர் என்று இன்னொரு சாராரும் கூறுகின்றனர். தமிழ்நாடு ஓவியக் கலையிலும், நடனக் கலையிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அடைந்திருந்த சிறப்பை இந்த ஓவியங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இந்த ஓவியங்களைக் கண்ட அப்பர், திருநாவுக்கரசர்
“கைந்நின்ற ஆடல் கண்டால் பின்னைக்
கண்கொண்டு காண்பதென்னே” எனப் பாடியுள்ளார்.
9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டிய மன்னர் காலத்தில் இக்குகை செப்பனிடப்பட்டது. இளங்கௌதம னார் என்னும் சமணத்துறவி அவறீப சேகரன், ஸ்ரீவல்லப பாண்டியனுடைய உதவியைப் பெற்று இக்குடவரைக் கோயிலைப் புதுப்பித்தார். (கி.பி.815 - 862) என சான்றுகள் உள்ளன. சித்தன்ன வாசல் ஓவியங்கள் பல்லவர் காலத்து ஓவியங்கள் என்றே வரலாற்று ஆசிரியர்களும், ஆராய்ச்சி யாளர்களும் கூறுகின்றனர். இப்பொழுது அங்கு கிடைத்துள்ள கல்வெட்டுகளிலிருந்து அந்த ஓவியங்கள் பாண்டியர் காலத்தது என்று தெரிய வருகிறது. கூரையில் உள்ள ஓவியம் ஒரு தாமரைக் குளத்தைக் காட்டுகிறது. அதில் தாமரை மலர்களும் மலராத மொட்டு களும் சிவன் பக்தர்களாகிய சமணப் பெரியோர்களும் காட்சி அளிக்கின்றனர். இடது பக்கத் தூணில் ஆடலரசியின் ஓவியம் வரையப்பட்டுள்ளது. அவரது இடது கைகள் பெரு மிதத்துடன் மார்புகளின் குறுக்கே நீட்டிக் கொண்டிருக் கின்றன. வலக் கையில் உள்ளங்கையும், விரல்களும் மேல் நோக்கி இருக்கின்றன. இடக்கையில் விரல்கள் அழிந்து காணப்படுகின்றன. வலது பக்கத் தூணில் நடன மங்கை தனது இடது கையைத் துதிக்கைபோல் வளைத்திருக் கிறாள். இவளது முகம் சோகமாக உள்ளது. மேலும் இந்த ஓவியத்தில் பறவைகள், மீன்கள், எருமை மாடுகள், யானை வரையப்பட்டுள்ளன. இரு சமணர்கள் கைகளால் தாமரை மலர்களைப் பிடித்துக்கொண்டு குளத்தின் அழகை ரசிப்பது போன்று உள்ளது. அக்கால ஓவியர்கள் மனித உருவங்களை அழகுபட வரைந்துள்ளனர்.
நடு மண்டபத்தை அடுத்து இருப்பது கோயில். வலப் பக்கமும், இடப்பக்கமும் சமண தீர்த்தங்கர் சிலையும், சமணர் தலைவர் சிலையும் உள்ளன. உள் அறையின் மேல் விதானத்தின் நடுவில் கல்லில் செதுக்கப்பட்ட தாமரைச் சிற்பம் உள்ளது. சுவர் ஓவியங்கள் இடைக் காலத்தில் வெளித் தெரியாமல் மறைந்திருந்தன. 1919-ஆம் ஆண்டில் இதைக் கண்ட டி.ஏ.கோபிநாத ராயர் என்பவர் புதுச்சேரியில் வாழ்ந்த பிரெஞ்சுக்காரரான முயோ தூப்ராய் என்பவருக்குத் தெரிவித்தார். இவர் பல்லவர் கால கலை மற்றும் வரலாற்றை ஆராய்ந்து வந்தார். அவர் சித்தன்ன வாசலுக்கு வந்து சுவர் ஓவியங்களின் பெருமையை உலகிற்குத் தெரிவித்துள்ளார். சித்தன்னவாசல் இப்போது சுற்றுலாத் தலமாக மாற்றப் பட்டுள்ளது. இந்த இடத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். 2 1/2 ஏக்கர் நிலத்தில் 10 அடி ஆழம் உள்ள செயற்கைக்குளம் ஒன்று உருவாக்கப்பட்டு படகு சவாரிக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிறுவர் பூங்கா, தமிழன்னை சிலை, மகாவீரர் சிலை ஆகியவை உருவாக் கப்பட்டுள்ளன. மேலும் அதிநவீன முறையில் இசை நீரூற்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஊருக்குக் கோடை விடுமுறையின்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக மாக வருகின்றனர். நாம் அவசியம் கண்டு களிக்க வேண்டிய இடம் சித்தன்னவாசல் ஆகும்.