tamilnadu

img

உதகை மலர்க்கண்காட்சி தொடங்கியது

உதகை, மே 20- உலகப் புகழ்பெற்ற உதகை மலர்க்கண்காட்சியை வெள்ளியன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கிவைத்தார்.  சர்வதேச சுற்றுலா நகரமான நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் சுமார் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர்.குறிப்பாக, ஏப்ரல், மே மாதத்தில் மட்டும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் வருகைபுரிந்து இயற்கையின் அழகை ரசித்து செல்கின்றனர். ஆகவே, இம்மாதங்களில் வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் நீலகிரி மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் முக்கியமான அம்சமாக ரோஜா காட்சி, மலர்க்கண்காட்சி மற்றும் பழக்காட்சி ஆகியவற்றைக் காணசுற்றுலா பயணிகள்படையெடுப்பர்.

குறிப்பாக, உதகை தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர்க்கண்காட்சி உலகப் பிரசித்தி பெற்றது என்பதால் இந்த கண்காட்சியை காண உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருவார்கள். இந்தாண்டுக்கான 124 ஆவது மலர்க்கண்காட்சி வெள்ளியன்று தொடங்கியது. இந்த கண்காட்சியை தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கிவைத்துப் பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் சிறப்பம்சமாக 1 லட்சம் கார்னேசன் மலர்களால் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கட்டிடம் போன்ற வடிவமைப்பு அலங்கரிக்கப்பட்டிருந்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. மேலும், 20 ஆயிரம் மலர்களால் 124வது மலர்க்காட்சி என்ற அலங்காரமும், 20 ஆயிரம் மலர்களால் பழங்குடியினர் சிலைகளும், 10 ஆயிரம் மலர்களால்‘ஊட்டி 200’மற்றும் 2 ஆயிரம் மலர்களால் மஞ்சப்பை என்ற வடிவமைப்பும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.இதேபோல், 20 ஆயிரம் வில்லியம்ஸ் மற்றும் கொய்மலர் மலர்த் தொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தன.இந்த மலர்கண்காட்சி தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற இருக்கின்றது. முன்னதாக, இந்நிகழ்ச்சியில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, சட்டமன்றஉறுப்பினர் ஆர். கணேஷ், நீலகிரி மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் இரா. பிருந்தாதேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.