tamilnadu

விண்ணகம் வியக்கும் விருப்பங்கள்

நவகவி
இருக்கும் அகலம் போதா தென்று இன்னும் இன்னும் விரியுது வானம்! அதனினும் பெரிதாய் விரிக என்அகம்!

அகந்தையால் அல்ல அன்பால் என்சிரம் கழுத்து தாங்காத கனத்தைப் பெறுக!

மன்னன் ஆகிநான் மகுடம் சூடினால் அந்த மகுடம் பிச்சைத் தட்டும் அற்ற யாசகன் கைத்திரு ஓடாய் மேன்மை காணுக!

தொடுக்கும் எனது கவிதை வரிகள் தொப்புள் கொடிகளாய் தோற்றம் எய்தி அன்னை வயிற்றுச் சிசுக்களுக் கெல்லாம் ஆகாரத்தை அனுப்பி உதவுக!

காற்றும் கூட களவாடப் பட்டு வெற்றுக் கிரகமாய் விண்ணில் அலைந்தால் அபலை பூமிக்கு ஆதர வாகஎன் ஒற்றை மூச்சே உயிர்க்காற்று தருக!

என்நதி ஓர நாணல் புதர்கள் மூங்கிலுக் குரிய மூர்க்கம் பெற்று ஆயுதம் இழந்தஎம் வில்லாளி களுக்கு கோடி வில்களைக் கொடையாய்த் தருக!

எனினும் எனது எளிய இருதயம் கயமையின் மேலே கையெறி குண்டாய் எறியப் படும்நிலை இல்லா தொழிந்து போர்அற்ற புவியில் மழலைகள் ஆடும் பூப்பந் தாகும் புண்ணியம் எய்துக!

எனது செவிமடல் இரண்டும் விரிந்து ஆகா யத்துக் கப்பால் வசிக்கும் அதிசய மாந்தரின் குரலை ஈர்க்கிற மின்குடை யாகி விண்ணை நோக்கும் விரிகுடை ஆகுக!

வெட்டி எறியும்என் நகத்துணுக்கு உட்பட எனது மேனியின் எல்லாப் பாகமும் உலகின ருக்கு உபயோகம் ஆகுக!

எனது வாசலில் மனிதரும் மனிதரும் சந்திக்கும் போது முள்ளும் முள்ளும் மோதிக் கொள்ளுமோர் மூர்க்கம் மாறுக! மலரும் மலரும் சந்தித்துக்கொள்ளும் மாற்றம் நேருக!

கனிவுடன் பிறர்என் கைகுலுக் கிடில்அவர் பொன்மோ திரவிரல் உறுத்தல் எதற்கு? அதற்குப் பதிலாய் ஆலையின் வயலின் புழுதிக் கரங்களில் என்கரம் புதைக!

நளின நடைஇது என்னும் போர்வையில் நரிநடப் பதுபோல் நடப்பவர் நடைஏன்? வழியில் மனிதர் வருகையில் நடையில் அமைதிப் புறாவின் அசைவு நிகழ்க! தென்றல் மனிதர்......தெருவில் நிறைக!

மலையையும் மலையின் முகட்டையும் நிகர்த்து மானிடர் மார்பும் சிரசும் ஓங்குக! ஆனால் மானுடம் கல்லால் செய்த மலையாய் அல்ல கனியால் செய்த மலையாய் தோன்றுக!

எதிர்வரும் யுகங்கள் பின்தங்கு மாறு புதிர்மிகும் மானிடர் முன்முன் ஏகி தொடரும் யுகங்களைத் தோள்சேர்த் திடுக!

வாய்வழி யாய்விண் மீனை விழுங்கவும், காய்கதி ரோனுக்கும் கனலை வழங்கவும், பிறைநிலாப் புனலை பேரள வாக்கவும், சிறைஎலாம் சுதந்திரக் காற்று வீசவும், மந்திரம் எனக்கருள் வாயே மானுடம் என்னும் மகத்துவத் தாயே!