புதுகை மாவட்டத்தில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை தடுத்து நிறுத்துக!
காவல்துறைக்கு சிபிஎம் வலியுறுத்தல்
புதுக்கோட்டை, ஜுன் 7- நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை தடுத்து நிறுத்துவதற்கு காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இளைஞர்களிடையே பல்வேறு விதமான போதைப்பழக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இளைஞர்களிடையே குரூர மனப்பான்மை அதிகாரித்து, அவர்களுக்குள் தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இது பல சமயங்களில் கொலைச் சம்பவங்கள் வரை கொண்டு செல்கிறது. நகரப் பகுதிகளில் ஆள் இல்லாத வீடுகளை கண்காணித்து இரவு நேரங்களில் பூட்டை உடைத்து கொள்ளையடித்துச் செல்லும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. மேலும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், அதிகாலையில் வீட்டு வாசலில் நிற்கும் பெண்களிடம் நகைகளைப் பறித்துச் செல்லும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. மேற்படி குற்றச் செயல்கள் மாவட்டக் காவல்துறையின் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது. எனவே, காவல்துறை இரவு மற்றும் பகல் நேரங்களில் ரோந்துப் பணிகளை அதிகரித்து கண்காணிக்க வேண்டும். பல்வேறு விதமான போதைப் பொருட்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதைக் கண்காணித்து தடைசெய்ய வேண்டும். குற்றச் செயல்களில் ஈடுபடுபடுபவர்களை உடனுக்குடன் கைதுசெய்து கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர பேவண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைதி நிலவுவதற்கும், பொதுமக்கள் நிம்மதியாக வாழ்வதற்கும் மாவட்டக் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.