சென்னை, டிச.25- சென்னையில் உள்ள ரஷ்ய மாளிகையின் 50-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவிலான குழந்தைகள் செஸ் போட்டி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் சனிக்கிழமை (டிச.24) நடைபெற்றது. சென்னையில் உள்ள ரஷியன் ஹவுஸ், சென்னை மாவட்ட செஸ் அசோசியேஷன் மற்றும் இந்தோ-ரஷியன் ஸ்போர்ட் கிளப் இணைந்து செஸ் போட்டியை ஏற்பாடு செய்திருந்தன. போட்டியில், தமிழகம் முழுவதிலுமிருந்து 8 முதல் 25 வயதுக்குட்பட்ட 410 வீரர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் 6 சுற்றுகள் விளையாடப்பட்டு சுவிஸ் முறை பின்பற்றப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கமும், பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பின்னர் சென்னையில் உள்ள ரஷ்ய மாளிகையின் இயக்குநர் ஜெனடி ரோகலேவ் பேசுகையில், ‘‘ரஷியன் ஹவுஸ் (ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம்) 1972-இல் நிறுவப்பட்டது. ஆரம்பம் முதல் இன்று வரை,
ரஷ்ய மாளிகை இந்தியா மற்றும் ரஷ்ய கூட்டமைப்பு மக்களுக்கு இடையே பரஸ்பர நன்மை பயக்கும் நட்பை வளர்த்து வருகிறது. ரஷ்ய மாளிகை அறிவியல், கலாச்சார நிகழ்வுகள், ரஷ்ய மொழி மற்றும் ரஷ்ய கல்வித் துறையில் இந்திய-ரஷ்ய ஒத்துழைப்பை தீவிரமாக ஊக்குவிக்கிறது. ரஷ்யாவும் இந்தியாவும் பல விஷயங்களில் ஒன்றுபட்டுள்ளன. அவற்றில் ஒன்று சதுரங்கம் மீதான காதல். ‘‘சென்னையில் உள்ள ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம் செஸ் பிரியர்களுக்கு தனித்துவமான இடமாக இருப்பதால், எங்கள் அமைப்பு நிறுவப்பட்ட 50-ஆவது ஆண்டு விழாவையொட்டி செஸ் போட்டியை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பழம்பெரும் ரஷ்ய செஸ் வீரர் மிகைல் தால் பெயரிடப்பட்ட செஸ் கிளப், 1972-இல் எங்கள் மையத்தில் திறக்கப்பட்டது. இந்தியாவின் முதல் உலக செஸ் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் உட்பட பல திறமையான செஸ் வீரர்கள் எங்கள் செஸ் கிளப்பில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கினர்’’ என்று கூறினார்.