ப.முருகன்
செம்மொழியான தமிழ்மொழி உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர்களாலும் தமிழர் அல்லாதவர்களாலும் உலகம் முழுவதும் பரப்பப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டுக்கு வந்த பிற மொழி அறிஞர்கள் பலரும் தமிழின் அருமை பெருமையை உணர்ந்து தங்கள் நாட்டு மக்களுக்கும் உணர்த்துவதற்காக தங்களது மொழிகளில் தமிழ் இலக்கியங்களை, நூல்களை மொழிபெயர்த்து உச்சி மோந்திருக்கிறார்கள். தமிழைப் பரப்பியிருக்கிறார்கள். ஒருவர் தன்னை தமிழ் மாணவன் என்று கூறுவதையே பெருமையாகக் கருதி கல்லறையில் எழுதச் சொன்னார். மகாத்மா காந்தி தனக்கு இன்னொரு பிறவி கிடைத்தால் தமிழ்மொழியை முற்றாகக் கற்பேன் என்று கூறினார். அதுமட்டுமின்றி அவர் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பாஜகவைச் சேர்ந்த கே.பி.ராமலிங்கமோ, அவரது தலைவர் நரேந்திர மோடி 2014 இல் பிரதமரானதற்குப் பிறகுதான் தமிழ் உலக நாடுகளில் பரப்பப்படுகிறது என்று கூறியிருக்கிறார். 2019 ஆம் ஆண்டு ஐ.நா. சபையில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பேசி தமிழ் மொழியை உலகறியச் செய்திருக்கிறார் என்று புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்.
மோடிக்கு முன்னரே ஐநாவில் தமிழ் முழக்கம் நடந்திருக்கிறது என்பதை மறந்துவிட்டார் போலும். அது மட்டுமின்றி, நாடாளுமன்றத்தில் அமைச்சர்களால் திருக்குறள் மேற்கோள் காட்டப்படுகிறது என்றும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமரே பாரதியின் பாடலைஎடுத்துரைத்திருக்கிறார் என்றும் நெக்குருகியிருக்கிறார்.இவர்களுக்கு முன்பும் நாடாளுமன்றத்தில் திருக்குறள் எடுத்தாளப்பட்டிருக்கிறதே? தமிழ்மொழி மீது பாஜகவுக்கும் பிரதமர் மோடிக்கும் அவ்வளவு பற்றும் பாசமும் இருந்தது என்று நம்பவைக்க முயல்கிறார் பாவம். பாஜகவின் முதல் பிரதமரான அடல்பிகாரி வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் தான் தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தினர் புதுதில்லியில் இயக்கம் நடத்தி, அப்போதைய எம்பியான வைகோ மூலம் பிரதமரை சந்தித்துப் பேசினார்கள். ஆனால் தமிழ் செம்மொழி என அறிவிப்பு செய்யப்பட்டதா வாஜ்பாயால்? அவருக்குப்பின் இடதுசாரிகளின் ஆதரவுடன் ஆட்சியிலிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பிரதமர் மன்மோகன் சிங்கால் அல்லவா 2004இல் செம்மொழி அந்தஸ்து அறிவிக்கப்பட்டது. செம்மொழி தமிழ் உயராய்வு மையம் அமைக்கப்பட்டது. “தமிழ்மொழி எனக்கு மிகவும் பிடிக்கும்; இந்த மொழியின் ரசிகன் நான்;உலகின் பழமையான தமிழ்மொழி; தமிழ் கலாச்சாரத்தின் பெரிய அபிமானி நான்; தமிழ் மீதான என் அன்பு என்றும் குறையாது; தமிழ் குறித்து எனக்கு மிகவும் பெருமிதம் உள்ளது” என்றபிரதமர் மோடி மன்கி பாத் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தித் தன்னுடைய உள்ளத்தின் உணர்வுகளை தெளிவாகவும் திடமாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார் என்றும் கே.பி.ராமலிங்கம் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால் அவரது ஆட்சியில் செம்மொழியான தமிழ்மொழிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அவரது எஜமான அமைப்பான ஆர்எஸ்எஸ்-சின் ஆஸ்தான மொழியான சமஸ்கிருதத்துக்கு எவ்வளவு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் பார்த்தால் அவரது ரசிக மனமும் அபிமான குணமும் பெருமித உணர்வும் எத்தனை உண்மையானது என்று புரியும். சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக தில்லியில் தேசிய சமஸ்கிருத மையம் நிறுவப்பட்டுள்ளதாகவும் இதற்கு 2019 - 20இல் ரூ.231. 15 கோடியும், 2018 - 19இல் ரூ.214.38 கோடியும், 2017-18 இல் ரூ.198.31 கோடியும் என 3 ஆண்டுகளில் மொத்தம் ரூ.643.84 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய அமைச்சர் பிரகலாத்சிங் படேல் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார். அதே நேரத்தில் தமிழ்மொழிக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு 2017-18இல் ரூ.10.59 கோடி, 2018-19இல் ரூ.4.65 கோடி , 2019 -20இல் ரூ.7.7 கோடி என மூன்றாண்டுகளில் மொத்தம் ரூ.22.94 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது தான் ஒன்றிய பாஜக ஆட்சியின், மோடியின் உண்மையான தமிழ்ப்பாசம். மகாகவி பாரதியின் பாட்டை எடுத்துக்கூறி இராணுவ வீரர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார் என்றும் புல்லரித்திருக்கிறார் கட்டுரையாளர் ராமலிங்கம். பாஜகவின், ஆர்எஸ்எஸ் -சின் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே கலாச்சாரம்... போன்றவற்றிற்காகவே மோடியின் இதயம் துடிக்கிறது. ஆனால் தமிழ் நாட்டு மக்களை கவர வேண்டும் என்பதற்காக வானொலியில் ஒலிபரப்பப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியில் அவ்வப்போது தமிழ் நாட்டு மக்களிடம் நெருங்குவதாக நினைத்துக் கொண்டு தொல்காப்பியம் பற்றிக் கூட பேசுகிறார் மோடி. தமிழ்மக்கள் இதயங்களில் இடம்பிடிக்க தவியாய்த் தவிக்கிறார்கள் பாஜக ஆட்சியாளர்களும் கட்சியினரும். அதற்கான முயற்சிகளில் ஒன்றுதான் கே.பி.ராமலிங்கத்தின் இந்தக் கட்டுரையும். செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்தநாள். அதே நாளில் தான் மோடியும் பிறந்திருக்கிறார்.
ஆனால் ‘தமிழ் பரப்பும் பெரியார்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருப்பதிலிருந்தே அவரது நோக்கம் தெரிகிறது. தமிழகத்தில் அறிஞர் என்றால், கலைஞர் என்றால், தமிழ்த்தென்றல் என்றால் பெரியார் என்றால் அண்ணா, கருணாநிதி, திருவிக, (பெரியார்) ஈ.வெ.ரா ஆகியோரை தான் குறிக்கிறது. பெரியாரின் புகழை மறைக்க யாராலும் முடியாது. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்ற பாடலே நினைவுக்கு வருகிறது. அது மட்டுமின்றி கட்டுரையின் முடிவில் தமிழன்னையே, தமிழ் வளர்க்கும் பெரியார் என்று மோடியை வாழ்த்துவாள் என்று கூறியிருப்பது தான் கொடுமை. தந்தை பெரியார் தமிழை வளர்க்க, தற்காலப்படுத்த எழுத்துச் சீர்திருத்தம் கூட மேற்கொண்டார். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசின் பள்ளிகளில் தமிழ் ஒரு மொழியாக பயிற்றுவிக்கப்படுவதே கேள்விக்குறியாக உள்ளது. விருப்பப்பட்டால், ஆசிரியர் இருந்தால் கற்றுக் கொள்ளலாம் என்கிற நிலைமையே, தமிழ் ரசிகரின் ஆட்சியில் உள்ளது. இத்தகைய நிலையை ஏற்படுத்தியிருக்கும் மோடியை தமிழ வளர்க்கும் பெரியார் என்று தமிழன்னை வாழ்த்துவாளா? இன்னும் சொல்லப்போனால் தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் சமஸ்கிருதமும் இந்தியும் திணிக்கப்படும் காரியத்தைச் செய்து கொண்டிருப்பவரை தமிழ் வளர்க்கும் பெரியார் என்று கூறுவாளா தமிழன்னை? இந்தியாவின் பிறமாநிலங்களில் தமிழ் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் போன்றவற்றை ஏற்படுத்திட சிறுதுரும்பையாவது கிள்ளிப் போடட்டும் மோடியும், அவரது அரசும். அப்போது தான் அவர் தமிழ் ரசிகனாய், அபிமானியாய் தமிழக மக்களின் கண்களுக்குத் தெரிவார். அல்லாமல் வெற்றுப் பேச்சுகளால், கட்டுரைகளால் ஒரு பயனும் விளையாது. வெறும் வாயளப்புகளால் தமிழ் பரவாது; வளராது பிரதமர் மோடியின் தமிழ்ப் பேச்சு பரப்பல் அல்ல, பசப்பல்!