tamilnadu

img

போட்டித்தேர்வு: அப்போ இது வகுப்புக்கு முன்னாடி செய்யனுமா..? - ஹரி

வழக்கம்போல வரவேற்பு அறையில் ஏழெட்டு பேர் தங்கள் பெற்றோர்களுடன் அமர்ந்திருந்ததைப் பார்த்தவுடன் நம் தேர்வருக்கு சிரிப்பு முட்டியது. வரவேற்பு அறை இன்னும் கொஞ்சம் கூடுதலாக மெருகேறியிருந்தது.  சுவர்களில் வெற்றி பெற்றவர்களின் படங்கள் அதிகரித்திருந்தன. அதில் ஒரு படத்தைப் பார்த்து துணுக்குற்றவர், இந்தப் பொண்ண நேற்றைக்கு நாளிதழில் வேறொரு பயிற்சி மையத்து விளம்பரத்தில் பார்த்தோமே என்று யோசிக்கத் தொடங்கினார். என்ன தம்பி.. படங்களப் பாத்து அப்புடியே நின்னுட்டீங்க.. அண்ணா, வணக்கம்... என்ன ஒரு நாலு நாளாப் பாக்க முடியல... வீட்டுல உக்காந்து டெஸ்ட் போட்டுட்டு இருந்தேன்..

அந்தப் படத்தப் பாத்து ஏன் அப்புடி இருந்தீங்கன்னு எனக்குத் தெரியும்.. வேறொரு மையத்து விளம்பரத்துலயும் பாத்தேன்.. நான் எண்ணிக்கிட்டே வர்றேன்... இது அஞ்சாவது மையம்... இவங்களத் தன்னோட மாணவர்னு சொல்லிக்குறது.. நான்கூட வேறொரு மையத்தோட மாதிரித் தேர்வு எழுதுனேன்.. அதுக்கு என்னோட விபரங்கள் முழுக்க தந்துருக்கேன்.. நான் தேர்ச்சினாலும் அவங்க மாணவர்னு சொல்லிக்குவாங்க.. இப்போ புரியுது... ஆனா, ஒருவாரமா உங்களத் தேடிட்டு இருக்கேன்... நீங்க பாட்டுக்கு அன்னிக்கு U, P, S & C னு சொல்லிட்டுப் போயிட்டீங்க...  UNDERSTANDING - புரிதல் அதுவா, U.. னா Understanding.. புரிதல்... நான் சொல்ல வர்றது,  போட்டித் தேர்வுனா என்ன.. என்ன தேர்வு எழுதப்போறோம்.. அதுக்கு என்ன தகுதி... இப்படிலாம் கிடையாது..  அப்புறம்... புரிதல்னா அதுதான.. நான் சொல்ல வர்றது, அதில்ல... பள்ளிப்பாடப்புத்தகங்கள்... குறிப்பான சில புத்தகங்கள்... பழைய வினாத்தாள்கள்... இதெல்லாம்தான் முதல்ல படிச்சுருக்கனும்... செய்தித்தாள், தொலைக்காட்சி செய்திகள் வாழ்க்கையோட அங்கமா மாறியிருக்கனும்.. குறைஞ்சது மூணு மாசமா தொடர்ந்து இதெல்லாம் பண்ணிருக்கனும்.. எனக்கெல்லாம் ஆறு மாசம் ஆயிரும் போலருக்கே.. பளளிக்கூடப் பாடப்புத்தகங்களப் படிக்குறதுக்கே டைம் ஆயிரும்... ஆறுலருந்து பத்தாம் வகுப்புப் புத்தகங்களைப் படிக்குனும்ல.. ஆகலாம்... 11, 12 ஆம் வகுப்புப் புத்தகங்களயும் படிச்சுக்கனும்.. வரலாறு, பொருளியல், புவியியல், அரசியல் அறிவியல்னு நமக்குத் தேவையானது அந்த வகுப்புகள்லயும் இருக்கு..  அதெல்லாம் முத வகுப்புல சொல்லலியே..?

அதற்குள் வகுப்புக்கு ஆசிரியர் வந்துவிட்டார் என்று சொன்னதால், அண்ணா.. முடிஞ்சவுடன உங்களப் பாக்குறேன் என்று சொல்லிவிட்டு தேர்வர் நகர்ந்தார். வகுப்பிற்குள் சென்று அமர்ந்தவருக்கு நினைவுகள் முழுக்க அந்த உரையாடலில்தான் இருந்தது. வகுப்பறையில் முன்னால் அமர்ந்திருப்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது ஆசிரியருக்குத் துல்லியமாகத் தெரியும். தேர்வரைக் கவனித்துவிட்ட ஆசிரியர், ஜவகர்லால் நேரு முக்கியமான ஆளுமை என்று குரலை உயர்த்தினார். மேலும் சிலரும் கவனிக்காமல் இருந்திருந்தனர். அனைவரின் பார்வையும் அவர் மீது பதிந்தது. நேரு 1889ல் பிறந்து 1964ல் இறந்தார்... இங்கிலாந்தில் படித்தார்... சட்டம் பயின்றார்.. 1916ல் காந்தியைச் சந்தித்தார்.. 1920ல் முதன்முறையாகக் கைது... முழு விடுதலை என்ற தீர்மானம் போட்ட லாகூர் மாநாட்டுக்குத் தலைமை.. முதல் பிரதமர்... பஞ்சசீலம்.. சீனப்போர்னு அவர் சொன்னதையெல்லாம் குறிப்புகளை பெரும்பாலானவர்கள் எடுத்துக் கொண்டிருந்தார்கள்..  அதென்ன வகுப்புல தோசை சுடுறது? வகுப்பு முடிந்து வெளியில வந்த தேர்வரின் கண்கள் தனது சீனியரைத் தேடியது. அரைமணிநேரம் கழித்துதான் அவரைப் பார்க்க முடிந்தது.  அண்ணா... ஜவகர்லால் நேரு பத்தி எடுத்தார்... பாடக்குறிப்புல இருக்குற எல்லாத்தையும் சொல்லிட்டாரு.. இது போதுமா..?

அவர் தோசை சுட்டுருப்பார்... நாமதான் இடைவெளிய நிரப்பிக்கனும்... அதென்ன தோசை சுடுறது.. உனக்குத் தோசை பிடிக்குமா... சப்பாத்தி பிடிக்குமா..  தோசைதான்... மொறு, மொறுனு வேற சாப்பிடனும்.. அதுக்கும் நாம படிக்குறதுக்கும் என்ன சம்பந்தம்..? தோசை மாவக் கல்லுல ஊத்துனவுடன ஓட்டை ஓட்டையா விழும்ல... ஏன் அப்புடி..? மாவு தண்ணியா இருக்கு.. அந்தத் தண்ணி ஆவியாயிடும்... அங்கங்க ஓட்டை விழும்.. சரியாச் சொன்ன.. சப்பாத்தி மாவக் கல்லுல போட்டா, அப்புடி ஆகுமா..? ஆகாது... ஏன்னா, மாவு கெட்டியாயிருக்கும்... மிஞ்சிப் போனா, புடைச்சுக்கிட்டு மேல வரும்... அதேதான்... வகுப்புல நிறைய இடைவெளி விட்டு, விட்டு எடுத்துட்டுப் போயிருப்பார்.. நாமதான் அந்த ஓட்டைகள அடைக்கனும்.. நம்ம தயாரிப்பு சப்பாத்தியா இருக்கனும்... கெட்டியா...  இப்போ புரியுது... இனிமே யாராவது கேட்டா, சப்பாத்திதான் பிடிக்கும்னு சொல்வேன்.. அது சரி.. நான் என்ன பண்ணிருக்கனும்.. நான்தான் சொன்னனே, குறிப்பான புத்தகங்கள்...  ஆமால்ல... சொன்னீங்க... நேருவப் பத்துன புத்தகத்தப் படிச்சுருக்கனும்... நீங்க படிச்சுருக்கீங்களா..

அவர் எழுதுன Discovery of India, Glimpses of World History.. இந்த ரெண்டுமே படிச்சுருக்கேன்... அவரோட சுயசரிதையும் இருக்கு... காங்கிரசுக்குள்ளயே அவர் ஒரு இடதுசாரி... இருந்தாலும் காந்தியோட முழுமையாப் பயணிச்சவரு.. இரண்டாம உலகப்போருல என்ன நிலைப்பாடு... சீனாவுடனான நட்பு, விடுதலைக்குப் பிறகான பொருளாதாரப் பாதை, மொழிக் கொள்கைனு நிறைய அம்சங்கள் அவரப் பத்தி எழுதுன புத்தகங்கள், கட்டுரைகள்ல இருக்கு... அப்படினா விமர்சனமும் இருக்குமா.? எதிர்மறையாவா... இருக்குதே.... விடுதலை இந்தியாவுல மக்களால தேர்வு செய்யப்பட்ட ஒரு மாநில அரசை முதன்முறையாகப் பதவிநீக்கம் செஞ்சதும் அவர் தலைமையிலான ஆட்சிதான்.. ஓ... எப்போ நடந்துச்சு..? 1959ல.. கேரள அரசைக் கலைச்சாங்க... இப்போ அப்படிலாம் ஈசியா செஞ்சிர முடியாது... நாடாளுமன்ற இரு அவை ஒப்புதல் வேணும்... கர்நாடகத்துல ஆட்சியைக் கலைச்சப்ப அப்ப முதல்வரா இருந்த எஸ்.ஆர். பொம்மை போட்ட வழக்குல, உச்சநீதிமன்றம் அப்புடி ஒரு தீர்ப்பக் குடுத்துச்சு.. இது அடிக்கடி செய்தித்தாள்கள்ல வரும்.. தொலைக்காட்சி செய்திகள், விவாதங்கள்ல இருக்கும்..  பாடத்திட்டத்தத் தாண்டுற மாதிரி இருக்கே... பொது அறிவுதான... கொள்குறிவகைக் கேள்விகளுக்கே இப்பல்லாம் நீண்டவிடைகள் தேவைப்படுது.. தொடர்புடைய விஷயங்களப் படிச்சுக்கிட்டா, பாடங்கள் மறக்காதுல்ல.. இப்புடி நமக்குப் பிடிச்சவங்க... பிடிச்ச விளையாட்டு.. பிடிச்ச விஷயம்னு பல புத்தகங்களப் படிச்சுக்கனும்..  அது சரிதான்... இதுதான் நீங்க சொன்ன புரிதலா... அதான்.. Uனு சொன்ன Understanding...

ஆமா... இதுலயே பழைய வினாத்தாள்களும் பாத்துர்றோம்...  அப்பதான் இதுவரைக்கும் எப்புடிக் கேட்டுருக்காங்கன்னு தெரியும்.. இதுவரைக்கும் ஜெயிச்சவங்களும், தோத்தவங்களும் எதை எதிர்கொண்டாங்கன்னு தெரிஞ்சுக்கலாம்..  நா ஒன்னு கேட்டா, தப்பா எடுத்துக்க மாட்டீங்களே, சீனியர்... என்ன, கேளுப்பா... இதெல்லாம் எப்புடி வகுப்புல சேந்தபிறகு பண்ண முடியும்..? வகுப்புல சேந்தபிறகு பண்ணனும்னு நா எங்க சொன்னேன்.. அப்புறம்..? இதுதான் முதல் படி... இதுக்கு அப்புறம்தான் வகுப்புல சேரனும்...  சொல்லப்போனா, கல்லூரில படிக்குறப்பயே இத ஆரம்பிச்சரனும்..  அப்போ நீங்க சொன்னது எனக்குக் கிடையாது..? உன்னை மாதிரித் தேர்வர்கள் இதயும் சேத்துச் செய்யனும்..  இதுதான் U, P, S & Cல இருக்குற அந்த U.. Understanding... புரிதல்...  அப்படினா, அந்த P என்னண்ணா..   உனக்கு நேரமாகலையா..? ஆமா... ஆமா... ஆயிருச்சு... நாளைக்குக் கேட்டுக்குறேன்... வர்றேன்..