tamilnadu

img

மதவெறிக்கு எதிரான போர் முழக்கம்

சென்னை, மே 7- திமுக ஆட்சியின் ஓராண்டு நிறைவை யொட்டி, அரசு சார்பில் செய்த திட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பட்டி யலிட்டு உரையாற்றினார். இதற்கு நன்றி தெரிவித்தும் அரசின் சாதனை களை பாராட்டியும் அனைத்து கட்சித் தலைவர்களும் உரையாற்றினர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவர் நாகைமாலி உரையாற்றினார்.

சவால்களை முறியடித்தவர்!

2021 ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர் இன்றைய முதலமைச்சர் தலைமையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறுகிறது. இந்த ஆட்சிக்கும், ஆட்சிக்கு தலைமை தாங்கி  வழி நடத்திக் கொண்டிருக்கிற முதல மைச்சருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா பெருந்தொற்றில் இரண்டாவது அலை உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் ஆக்சிஜன் பற்றாக் குறையால் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருந்தது. இந்த இக்கட்டான சூழலில்  முதலமைச்சர் தலைமையில் பதவியேற்ற திமுக அரசு, இரண்டாவது அலையையும், அதைத் தொடர்ந்து மூன்றாவது அலையையும் சமாளித்து வெற்றி பெற்றது.

வரவேற்கும் நடவடிக்கைகள்!

அது மட்டுமல்ல, கொரோனா காலத்தில் ரூ. 4,000 நிவாரணம் வழங்கி, அதோடு மளிகைத் தொகுப்புகளையும் வழங்கி, மக்களை ஆற்றுப்படுத்தியவர் முதல்வர். சாதாரண நகரப் பேருந்து களில் பெண்கள் - திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயணம், சுய உதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி, கடந்த ஆட்சியின் போது மக்கள் நலன்களுக்காக போராடிய விவசாயிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மீது புனையப்பட்ட உண்மைக்கு புறம்பான ஏராளமான வழககுகள் அனைத்தையும் திரும்பப் பெற்றது போன்ற அறிவிப்புகள் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணை யம் அமைத்து, விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மணி மண்டம், அனைத்து சாதியினரும அர்ச்சகர் ஆகும் வகையில் 58 பேருக்கு பணி நியமனம் போன்ற நடவடிக்கைகள் மக்களின் பாராட்டைப் பெற்றன. கொரோனா கால கற்றல் இழப்பு களை குறைக்க இல்லம் தேடி கல்வி திட்டம், நோயற்ற வாழ்விற்கு மக்களைத் தேடி மருத்துவம், உழவர்களுக்கு 1 லட்சம் மின் இணைப்புகள் இலவசம் இத்திட்டங்கள் அனைத்தும் வரவேற்கும் திட்டங்களாகும்.

அரணாக நிற்கும் அரசு!

இந்திய நாட்டின் விவசாயத்தையும், இந்திய விவசாயிகளையும் அழிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டு மென உணர்வுப்பூர்வமான ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து இந்திய விவசாயிகளுக்கு பக்கபலமாக நின்றார்  முதலமைச்சர். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டுமென சட்டமன்றத்தில் ஒரு அழுத்தமான தீர்மானத்தைக் கொண்டு சிறுபான்மை மக்களுக்கு அரணாக நின்றவர் நமது முதலமைச்சர். சமூக நீதியின் விளை நிலமான தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து முழுவிலக்களிக்க வேண்டுமென சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுனருடன் நீண்ட போராட் டத்தை நடத்தியவர் முதலமைச்சர்.

ஓங்கி ஒலிக்கும் குரல்!

தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நமது சட்டமன்றம் நிறைவேற்றும் தீர்மானங்களை மதிக்காமல் ஆளுநரை வைத்து அரசி யல் நடத்தும் பாஜக ஒன்றிய அரசுக்கு எதிராகவும், மாநில உரிமைகள், சுயாட்சி, மதச்சார்பின்மை மற்றும் இந்திய  அரசியல் சாசனம் வழங்கியுள்ள விழுமி யங்களை பாதுகாத்தவர் தமிழக முதலமைச்சர்.  இப்படி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன், இதற்காக ஓங்கி குரல் எழுப்பி வருவது மதச்சார்பற்ற ஜன நாயக சக்திகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது. அண்டை மாநிலமான கேரளாவோடு நட்புறவு பேணுவதில் நமது முதல மைச்சரின் அணுகுமுறையை வெகுவாக பாராட்டுகிறோம்.  கேரள மாநிலம், கண்ணூரில் நடைபெற்ற எங்கள் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் ‘கூட்டாட்சி தத்துவத்தின் அவசியம்’ குறித்து ஆற்றிய உரை வெகு சிறப்பானது. இந்த உரை மதவெறி சக்திகளுக்கான போர் முழக்கமாக நாங்கள் பார்க்கிறோம். தமிழக முதலமைச்சரின் மக்கள் சேவைப் பணி மென்மேலும் சிறந்து விளங்க வேண்டும். பேரவைத் தலை வர், பேரவைத் துணைத் தலைவர்,  அமைச்சர்கள், அரசின் உயர் அதிகாரி கள், ஊழியர்கள், சக சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவருக் கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். பேரவைத் தலைவர் மு.அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, கீதாஜீவன், அன்பில் மகேஷ் பொய்யா மொழி, செல்வப் பெருந்தகை(காங்.), சிந்தனை செல்வன்(விசிக), சதன்திருமலை குமார்(மதிமுக), ஜி.கே.மணி (பாமக), டி.ராமச்சந்திரன்(சிபிஐ), வானதிசீனிவாசன் (பாஜக), ஜவா ஹிருல்லா, ஈஸ்வரன், வேல்முருகன் உள்ளிட்டோர் பேசினர். அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனர்.

‘உங்களில் ஒருவன்’

ஓராண்டு நிறைவையொட்டி பாராட்டு தெரிவித்து பேசிய அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து பேசிய முதலமைச்சர்,“இந்த முதலாண்டு முத்தான தொடக்கமாக அமைந்திருக்கிறது. இரண்டாமாண்டு இணையற்ற ஆண்டாக இருக்கப் போகிறது. எனது ஆட்சி பயணத்தை  உங்கள் அனைவரின் வாழ்த்துக்க ளுடன் தொடர்கிறேன். நாம் அனைவரும் இணைந்து நமக்கான தமிழ்நாட்டை அமைப்போம். முதலமைச்சர் பதவி என்பது பொறுப்பு தான் என்பதை கலைஞர் கூறியிருக்கி றார். அந்த அடிப்படையில் உங்க ளுக்காக உழைக்கவும் கடமையுடன் பணியாற்றவும் உங்களில் ஒருவனாக இருப்பேன் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.