tamilnadu

பாதை அமைத்து வென்றிடு!

கோவி.பால.முருகு

திராட்சைத் தோட்டம் ஒன்றிலே 
      திரண்ட கொத்துக் கனிகளை
வரட்சி   தாகம்   பசியினால்
       வாடிய    நரியும்   கண்டது
திரண்டி   ருக்கும் கனிகளைத்
       தின்ன ஆசை கொண்டது
முரட்டுக் காலை ஊன்றியே
        முயன்று தாவிக் குதித்தது!

குதித்துக் குதித்து சோர்ந்தது
        குள்ள  நரிக்கு வியர்த்தது
கொதித்து உள்ளம் குமுறவே
        கோபத் தோடு பார்த்தது
“மதித்து உன்னை உண்ணவே
          மனதில் ஆசை கொண்டேனே”
அதிக     உயரம்    இருந்துநீ
           ஆட்டம் போட்டுக் காட்டுறாய்!

எட்டா  உன்னை எட்டிட
      ஏக்கம் நானும் கொண்டது
முட்டாள்  தனமில் லையே  
       முயற்சி   நானும்  கொண்டது
எட்டாக் கனியை எட்டிடும்
ஏக்கம் தன்னை விட்டிட
  திட்ட    மிட்டுச்  சொன்னது 
          திறமை தன்னை முடக்கிட.


மீண்டும் மீண்டும் முயன்றது
          மேன்மை அதிலே கண்டது
தூண்டும் ஊக்கம் கொண்டது
          துள்ளிக்  கனிகளைக் கவ்வியே,
வேண்டும் மட்டும் சுவைத்தது
          வேட்கை தன்னைத் தணித்தது.
கொண்ட முயற்சி ஒன்றினால்
          கொண்டது எட்டாக் கனியையும்!

கிட்டா  தாயின்  மறந்திடு
     கீழ்மை சூழ்ச்சி சொன்னது.
எட்டா  உயரம்  என்றிங்கே
      எதுவும் இல்லை உலகிலே
திட்ட  மிட்டு செயல்படு
தீர்வு எதற்கும் வழியுண்டு
பட்டறிவு    கொண்டு நீயும் 
       பாதை அமைத்தே  வென்றிடு!