tamilnadu

கழிவுநீரை அகற்றும் பணியின் போது பாதாளச் சாக்கடைக்குள் விழுந்து  தூய்மைப்பணியாளர் பலி

கழிவுநீரை அகற்றும் பணியின் போது பாதாளச் சாக்கடைக்குள் விழுந்து  தூய்மைப்பணியாளர் பலி  

தூத்துக்குடி, ஜூன் 8- திருச்செந்தூரில் பாதாளச் சாக்கடைக்குள் தவறி விழுந்து தூய்மைப்பணியாளர் உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்  சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஜூன் 8 ஞாயிறன்று வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது.  இதை முன்னிட்டு நகராட்சி சார்பில் நகர் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  இதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து தூய்மைப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். இந்நிலையில், திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள சாலையில் கழிவுநீர் ஓடிக் கொண்டிருந்தது. இதை சுத்தம் செய்யும் பணியில்  நெல்லை மானூர் நகராட்சியில் தூய்மைப்பணியாளராக பணியாற்றும் சுடலைமணி (40) என்பவர் ஈடுபட்டிருந்தார்.  அப்போது கழிவுநீர் லாரியில் இருந்து குழாயை எடுத்து பாதாளச் சாக்கடைக்குள் இறக்கும்போது திடீரென அவரும் பாதாளச் சாக்கடைகள் விழுந்தார்.  அவருடன் பணிபுரிந்து கொண்டிருந்த இதர தொழிலாளர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் பாதாளச்சாக்கடை கழிவுநீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து தகவல் அறிந்து, திருச்செந்தூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவரது சடலத்தை மீட்டனர்.  திருச்செந்தூர் தாலுகா காவல்துறையினர் அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.