சாலை பணியாளர்கள் தொடர் போராட்டம்
பெரம்பலூர், ஏப்.29- கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் தொடர் போராட்டத்தை தொடங்கினர். பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில், பெரம்பலூர் கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு, திங்கட்கிழமை நடைபெற்ற இந்த தொடர் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் பாலசுப்ரமணியன் தொடக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் சுப்ரமணியன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் பழனிசாமி, துணைத்தலைவர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ரெங்கசாமி, மாவட்டத் தலைவர் குமரி அனந்தன், சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளர் அகஸ்டின் ஆகியோர் பேசினர். கோரிக்கைகள்: போராட்டத்தில், தமிழக அரசின் அரசாணையை மீறி முறைகேடு செய்யும் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம்-பராமரிப்பு பெரம்பலூர் கோட்ட பொறியாளரின் நடவடிக்கையைக் கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். மேலும், சாலைப் பணியாளர்களுக்கு 2 ஆம் நிலை சாலை ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கவேண்டும். சாலைப் பணியாளர்களில் தகுதி வாய்ந்தவர்கள்ளுக்கு அலுவலக உதவியாளர், இரவு காவலர் பணி மாற்றம் செய்து ஆணை வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு சாலை பராமரிப்பு பணி மேற்கொள்வதற்குரிய கருவித் தளவாடங்கள், காலணி, மழைக் கோட்டுகள், காலணி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக அரசை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். இது தொடர்பாக சங்க நிர்வாகிகளிடம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.