லடாக், பிப்.4- கடந்த 2019-இல் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல் சட்டத்தின் 371-ஆவது பிரிவு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை ஒன்றிய மோடி அரசு வகுப்புவாத கண்ணோட்டத்துடன் ரத்து செய்தது. இதனால் ஜம்மு-காஷ்மீர் என்கிற மாநிலம் 2 ஆக பிரிக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் துண்டாடப்பட்டது. ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசம் சட்டமன்றத்தை கொண்டது; ஆனால் அது செயலற்றது. லடாக் யூனியன் பிரதேசத்துக்கு அதுவும் கிடையாது. இந்நிலையில், மீண்டும் முழுமையாக மாநில அந்தஸ்து வழங்கக் கோரி சனியன்று லே, கார்கில் மாவட்டங்களில் முழு அடைப்புடன் உறை பனியை பொருட்படுத்தாது, கையில் தேசியக் கொடியுடன் பல ஆயிரக்கணக்கானோர் பிரம்மாண்ட பேரணியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக லடாக் போராட்ட குழுவினர் கூறுகையில்,”எங்களுக்கு சட்டமன்றம் உருவாக்கி, மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். லடாக் மாநிலத்தை பழங்குடிகள் பிரதேசமாக பிரகடனப்படுத்தி அரசியல் சாசனத்தின் 6-ஆவது பிரிவில் இணைக்க வேண்டும். அத்துடன் லே, கார்கில் ஆகிய மாவட்டங்களை 2 மக்களவை தொகுதிகளாகவும் அறிவித்து நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும்” எனக்கூறினர்.