தமிழகத்தில் 13 மாவட்டங்களில் ரெட், ஆரஞ்சு எச்சரிக்கை
தென்மேற்குப் பருவமழை தொடங்கியது
சென்னை, மே 24 - கேரளத்தில் தென்மேற்கு பருவமழை சனிக்கிழமையன்று (மே 24) தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கேரளத்தில் வழக்கமாக ஜூன் 1 அன்று தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் இந்தாண்டு 6 நாட்கள் முன்கூட்டியே தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதனிடையே அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரிக்கு வட மேற்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டதன் காரணமாக, மகாராஷ்டிரா, கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டிலும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் மே 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் 20 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ கொடுத்துள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், ஞாயிற்றுக்கிழமை (மே 25) ஒரு நாள் மட்டும் பைன் மரக்காடுகள், தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை மூடுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், படகு சவாரி மூன்று நாட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 11 முதல் 20 செ.மீ வரை மழைக்கு வாய்ப்புள்ளது என்பதால் இந்த மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ கொடுக்கப்பட்டு உள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர் காட்டுப்பள்ளி, கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 7 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.