வைகுண்டர் விழாவில் பேசிய ரவி உதிர்த்த முத்து: ‘ஒப்பிலக்கணம் எழுதிய கால்டுவெல் ‘பள்ளிப் படிப்பைக் கூடத் தாண்டாதவர்’ என்பது. இப்படி அவர் அடித்து விடுவதை சாதாரணமாக நினைக்க வேண்டாம்.
ஏதோ வெள்ளைத்தோல் ஆட்கள் சதிசெய்து தமிழைப் புகழ்ந்து சமஸ்கிருதத்தை தாழ்த்தியதான ஒரு பிரச்சாரத்தை தொடர்வதின் ஒரு பகுதி தான் இது.
அதுமட்டுமல்ல, பள்ளிப்படிப்பைத் தாண்டாதவர் செய்த ஆய்வு என்று திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தைச் சொல்வதன் மூலம் அதன் நம்பகத்தன்மையை அவர் கேலி பேசுகிறார்.
உண்மை என்ன?
பிஷப் டாக்டர் ராபர்ட் கால்டுவெல், (Bishop Dr.Robert Caldwell) கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் படித்து இளங்கலைப் (Bachelor of Arts) பட்டம் பெற்றவர். கால்டுவெல் கிரேக்க மொழிப் பேராசிரியர் சர் டேனியல் சான்ட் போர்டு (Sir Daniel Sandford) அவர்களின் ஆய்வு மாணவர்.
சரி, ரவிக்கு என்ன பிரச்சனை?
சமஸ்கிருதத்தை சாராமல் தனித்தியங்கும் மொழிகளாக திராவிட மொழிக் குடும்பத்தை, குறிப்பாகத் தமிழை முன்வைத்து எல்லீஸ் செய்த ஆய்வை வளர்த்து, ஒப்பிலக்கணம் எழுதி, தமிழின் தனி உயரத்தை உலகுக்குச் சொன்ன கால்டுவெல் மீது ரவி கோபப்படுவது இயற்கை. அதை வர்ண பாசம் என்றும் சொல்லலாம்.
- நந்தலாலா