புதுக்கோட்டை, பிப்.11- ஒன்றிய ரயில்வே துறையின் சார்பில் ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் அம்ரீத் திட்டத்தில் புதுக்கோட்டை ரயில் நிலையம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. புதுக்கோட்டை ரயில் நிலையம், திருச்சி-காரைக்குடி-இராமேஸ்வரம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தின் வழியே தினமும் சராசரியாக 18 ரயில்கள் கடந்து செல்கின்றன. இத்தனை முக்கியத்துவம் பெற்ற ரயில் நிலையம், மூன்று நடைமேடைகளிலுள்ள எந்தக் குடிநீர்க் குழாயிலும் தண்ணீர் வருவதில்லை. பயணிகளுக்கான சிற்றுண்டியகம் இல்லை. அவசரத்துக்கு குடிநீர் பாட்டில், தேநீர் கூட கிடைக்காது. இப்படி எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாத இந்த ரயில் நிலையத்தின் நடைமேடையின் ஓரத்தில் அமைக்கப்பட்ட பாதுகாப்புச் சுவர் சேதமடைந்து முள்புதர்கள் நிறைந்துள்ளன.
ரயில் நிலையத்துக்கு வெளியே என்எல்சி நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தில் அமைக்கப்பட்ட கழிப்பறைகள் எப்போதும் பூட்டியே கிடக்கின்றன. அதேபோல, ஏடிஎம் சேவைக்காக கட்டப்பட்ட இரு அறைகளும் பூட்டியே கிடக்கின்றன. இந்நிலையில், ஒன்றிய அரசு நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை நவீனப்படுத்தும் அம்ரீத் திட்டத்தை அறிவித்திருக்கிறது. இதில், தமிழ்நாட்டில் இருந்து 60 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் புதுக்கோட்டை ரயில் நிலையம். நடைமேடையின் நீளத்தை அதிகரித்தல், இலவச வைபை இணைய வசதி, நவீன உணவகம், போதுமான சாலை வசதி, பயணிகள் தங்கும் வசதி உள்ளிட்டவற்றை மேற்கொள்ளவுள்ளனர். ரூ.20 கோடி வரை கிடைக்க வாய்ப்பு இதுகுறித்து மாநிலங்களவை உறுப்பினர் எம்எம்.அப்துல்லா கூறுகையில், ‘‘அம்ரீத் திட்டத்துக்காக முதலில் தயாரிக்கப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டை இல்லை. பிறகு நான் ரயில்வே வாரியத்திடம் வலியுறுத்தி புதுக்கோட்டையை பட்டியலில் சேர்த்தேன். ரூ. 10 முதல் ரூ. 20 கோடி வரை இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முடிந்தவரை கூடுதல் நிதி பெற்று அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
ரயில் சந்திப்பு நிலையமாக மாற்ற வேண்டும்
இதுகுறித்து கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை கூறுகையில், ‘‘அம்ரீத் திட்டத்தில் புதுக்கோட்டை ரயில் நிலையம் சேர்க்கப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். அதே நேரத்தில், புதுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூர் மார்க்கமாக சென்னை செல்லும் ரயில்கள் திருச்சி வழியாக நீண்ட தூரம் சுற்றி செல்வ வேண்டி இருக்கிறது. புதுக்கோட்டையில் இருந்து கந்தர்வகோட்டை வழியாக தஞ்சாவூருக்கு புதிய ரயில் தடம் அமைத்தால் அது பயணிகளுக்கு பேரூதவியாக இருக்கும். மேலும், பட்டுக்கோட்டையிலிருந்து திண்டுக்கல்லுக்கு புதிய ரயில் வழித்தடத்தை அமைத்து சாதாரண ரயில் நிலையமாக உள்ளதை ரயில் சந்திப்பு நிலையமாக மாற்றுவதற்கு ஒன்றிய அரசும் ரயில்வே துறையும் முன்வர வேண்டும்’’ என்றார்.