கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க கலந்தாய்வுக்கூட்டத்தில் பால் கொள்முதல் உபகரணங்கள் வழங்கல்
திருவாரூர், மே 15- திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் பால்வளத்துறை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் இணைந்து நடத்தும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர்கள் மற்றும் இணைதுறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமை வகித்தார். தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர்.டி.ஆர்.பி. ராஜா முன்னிலை வகித்தார். பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை ஆணையர் அ. அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே. கலைவாணன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து ஆகியோர் உடனிருந்தனர். பால்வளத்துறை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் சார்பாக ரூ.1.65 இலட்சம் மதிப்பிலான பால் உற்பத்தி பால் பரிசோதனைக்கருவி, பதிவேடுகள் மற்றும் பால்கேன்கள் உள்ளிட்ட பால் கொள்முதல் உபகரணங்கள் அமைச்சர்கள் த.மனோ தங்கராஜ், டி.ஆர்.பி.ராஜா வழங்கினார்கள். முன்னதாக, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் காமராஜர் சாலையில் உள்ள ட்டி.வி.ஆர்.(டி) 470 கொரடாச்சேரி கலைஞர் ஆவின் விற்பனை நிலையம், கலைஞர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் பயனாளிகளுக்கு கறவை மாடுகள் வழங்கும் விழாவினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் மற்றும் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர்.டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி உள்ளிட்ட அரசுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.