குழித்துறை, ஏப். 4- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் மாநில மாநாடு வரவேற்புக்குழுக் கூட்டம் குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய திரைக் கலைஞர் ரோகிணி, “நான் தெலுங்கராகப் பிறந்து தமிழராக வளர்ந்து மலையாளத்தில் கலை பயின்று ஒரு திரைக்கலைஞராக வளர்ந்திருக்கிறேன். எனது தனித்துவத்தை இந்தப் பன்மைத்துவம் தான் பேணி வளர்த்துள்ளது” என்றார். இக்கூட்டத்தில் பேசிய தமுஎகச பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, *தனித்துவம் நமது உரிமை பன்மைத்துவம் நமது வலிமை* என்ற மாநாட்டு முழக்கத்தை விளக்கிப் பேசினார்.
இந்தியா பன்மைத்துவத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது, அதனை ஒரே மொழி, ஒரே மதம் போன்ற வெற்று கோஷங்களால் பிரிக்க முடியாது என்றார். கூட்டத்தில் பேசிய பாலபிரஜாபதி அடிகளார், அய்யா வைகுண்டர் தோற்றுவித்த அய்யா வழி இயக்கம் சமத்துவத்தைப் பேசும் இயக்கமாகும். எனவே, சமத்துவத்தை முன்னிறுத்தும் தமுஎகச போன்ற இயக்கங்களோடு பணி செய்ய வேண்டியது எனது கடமையாகும். கிருஷ்ணரும் ராமரும் எளிய மக்களின் கடவுளர். அவர்களை இந்துத்துவ சக்திகளுக்கு விட்டுக்கொடுக்கக்கூடாது. காவிக்கொடி அதிகாரத்தில் வரும் என ஐயா வைகுண்டர் பேசியதாக சிலர் பொய் பேசி வருகின்றனர். அகிலத்திரட்டிலோ அருள் நூலிலோ இவ்வாறு எந்த இடத்திலும் கூறப்படவில்லை என்பதை உறுதியாகக் கூற முடியும் என்றார்.
கூட்டத்தில், 300 பேர் கொண்ட வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. வரவேற்பு குழு தலைவராக முன்னாள் எம்பி ஏ.வி.பெல்லார்மின், செயலாளராக தமுஎகச மாவட்டச் செயலாளர் ஜெ.எம்.ஹசன், ஒருங்கிணைப்பாளராக மாவட்டத் தலைவர் ஜெயகாந்தன், பொருளாளராக ஓய்வு பெற்ற ஆசிரியர் முரளீதரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். வரவேற்புக் குழு சார்பில் மாநாட்டை வழிநடத்தும் பல்வேறு குழுக்களும், அவற்றின் ஒருங்கிணைப்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
இக்கூட்டத்தில், கேரள முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்க திருவனந்தபுரம் மாவட்டச் செயலாளர் அசோகன், தமுஎகச மதிப்புறு தலைவர் ச. தமிழ்ச்செல்வன், தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், மாநில நிர்வாகிகள் ஜோ.மாதவராஜ், கே.வேலாயுதம், வெண்புறா, லட்சுமிகாந்தன் குமரி மாவட்ட நிர்வாகிகள் தக்கலை ஹலீமா, கவிஞர் அரங்கசாமி, வினோத், குமரி தோழன், மிகையிலான், ஜான் இளங்கோ, அருள் மனோ, விடியல் குமரேசன், முன்னாள் எம்எல்ஏகள் லீமாரோஸ், நூர் முகமது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செல்ல சாமி, ஓவியர் ராஜசேகரன் மார்த்தாண்டம் வர்த்தகச் சங்கத் தலைவர் அல் அமீன், குழித்துறை நகர்மன்ற முன்னாள் தலைவர் டெல்பின், எழுத்தாளர்கள் மலர்வதி, குமரி ஆதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.