tamilnadu

img

திண்டுக்கல்லில் பெருங்கற்கால நினைவுச் சின்னமும் கல்லாங்குழிகளும்

திண்டுக்கல்லில் 4000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால நினைவுச் சின்னமும்  கல்லாங்குழிகளும்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது: திண்டுக்கல் மலைக்கோட்டைக்குத் தென்புறம் பலபெரிய கற்களைக் கொண்டு ஓர் ஒழுங்குமுறை இல்லாமல் அமைக்கப்பட்ட  பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஒரு கல் அமைப்பு உள்ளதாக தீக்கதிர் செய்தியாளர் இல.முருகேசன் அளித்த  தகவலை அடுத்து இதை  ஆய்வு செய்தபோது அந்த அமைப்பு பழங்காலத்தில் இறந்தோர் நினைவாக எழுப்பப்பட்ட சின்னம் என்பது தெரியவந்தது. இந்தப்பெருங்கற்காலச் சின்னத்தில்தான் கல்லாங்குழிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கல்லாங்குழிகள் என்பது பணியாரக்குழி போன்ற ஓர் அமைப்பாகும்.இக்குழிகள் மனித இனத்தின் தொல்பழங்காலத்தில் இருந்தே உருவாக்கப்பட்டு வந்துள்ளன. சுமார் 7 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனித இனத்தால் இக்குழிகள் உருவாக்கப்பட்டன என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது. இந்தக் குழிகளை மனிதஇனம் உலகெங்கும் உருவாக்கி வைத்திருக்கிறது. எனினும் என்ன காரணத்துக்காக இக் குழிகள் உருவாக்கப்பட்டன என்பதில் தொல்லியல் ஆய்வாளர்கள் இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.ஏறக்குறைய 70 க்கும் மேற்பட்ட காரணங்களை உலகெங்கிலும் உள்ள தொல்லியல் ஆய்வாளர்கள் வகுத்து வைத்துள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை இக்கல்லாங்குழிகள் பெரும்பாலும் ஈமச் சின்னங்களோடு தொடர்புடைய இடங்களிலேயே நமக்குக் கிடைப்பதால் இக்குழிகளை மனிதனின் ஈமச்சடங்கோடு தொடர்புடையவையாகக் கருதலாம். தற்போது திண்டுக்கல்லில் கண்டுபிடிக்கப்பட்ட பெருங்கற்காலத்தைச் சேர்ந்த நினைவுச் சின்னத்தில் மொத்தம் 44 குழிகள் கண்டறியப்பட்டுள்ளன.இக்கல்லாங்குழிகள் 0.5 செ.மீ  முதல் 4 செ.மீ ஆழம் வரையிலும் 3 செ.மீ  முதல் 8 செ.மீ விட்டம்  வரையிலும் அமைந்துள்ளன.இக்குழிகள் மூன்று தொகுதிகளாக உள்ளன.முதல் தொகுதியில் 28 குழிகளும் இரண்டாம் தொகுதியில் 7 குழிகளும் மூன்றாம் தொகுதியில் 9 குழிகளும் உள்ளன.  இக்குழிகள் பெருங்கற்காலச் சின்னத்தில் உருவாக்கப்பட்டுள்ளதால் இப்பகுதியில் சுமார் 4000 வருடங்களுக்கு முன் வாழ்ந்து மறைந்த மூதாதையினர் நினைவாக அவர்களின் வழித்தோன்றல்களால் அமைக்கப்பட்டிருக்கலாம் என்பதை அறிய முடிகிறது. போரினாலோ அல்லது வேறு காரணங்களாலோ இறந்த போன தமது முன்னோர்களை நினைவுகூரும் வகையில் ஓர் ஆளுக்கு ஒரு குழி என்று அமைக்கப்பட்டிருக்கலாம் என்று கருத முடிகிறது.சில குழிகளை ஓர் ஆழமான கோடு,  வாய்க்கால் போல இணைக்கும் வகையில் குழிகள் உருவாக்கப்பட்டுள்ளன.இது மறைந்த மனிதர்களுக்கிடையே உள்ள ஏதோ ஓர் உறவுமுறையைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.ஒரு குழியில் நீர் ஊற்றினால் நீர் இந்த வாய்க்கால் மூலம் இணைக்கப்பட்ட குழிகளுக்குச் சென்றடைகிறது.இதுபோன்ற வாய்க்கால் கோடுகளால் இணைக்கப்பட்ட கல்லாங்குழிகளை பொலிவியா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் நாம் காணலாம். இந்தச் சின்னத்தின் மேற்குப்பகுதியில் 3 மற்றும் 4 செ.மீ உயரமுள்ள செங்குத்தான கோடுகள் பொறிக்கப்பட்டுள்ளன.மொத்தம் 7 தொகுதிகளில் 131 கோடுகள் பொறிக்கப்பட்டுள்ளன.இந்தக் கோடுகள் எல்லாம் பெருங்கற்காலச் சின்னத்தையும் கல்லாங்குழிகளையும் உருவாக்க செலவழிக்கப்பட்ட மனிதநாட்களாகக் கருதலாம்.  இந்த கோடுகள் உலோக ஆணிகள் கொண்டு உருவாக்கப் பட்டிருப்பது தெரிகிறது.தமிழகத்தில் பெருங்கற்காலமும் உலோக காலமும் சமகாலத்தில் நிலவியது என்பதை இந்தச் சின்னமும் இதில் உள்ள கல்லாங்குழிகளும் மேலும் உறுதிப் படுத்துகின்றன.அத்தோடு இவற்றின் காலத்தை 4000 ஆண்டுகள் அளவில் கணிக்கவும் உதவுகின்றன. இந்தச் சின்னத்தையும் இக்கல்லாங்குழிகளையும் பற்றிய ஆய்வுகள் மேலும் தொடர்ந்து கொண்டுள்ளன. இந்த ஆய்வின் போது ஆய்வு மாணவர்கள் ஜெரால்டு மில்லர், அருண், செல்வராஜ், ஞானபாலன் ஆகியோர் உடனுதவி செய்தனர்.