இரத்தப் புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை
இரத்தப் புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை புற்று நோய்க்கு கார்-டி(CAR-T) செல் சிகிச்சை எனும் முறை இந்திய மத்திய மருத்துவ தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. டி செல் என்பது தொற்றுகளை எதிர்ப்பதற்காக நமது வெள்ளை இரத்த அணுக்களில் உள்ள செல்களாகும். இந்த சிகிச் சையில் நோயாளி யின் டி செல்கள் எடுக்கப்பட்டு கார் (CAR) எனும் ஒரு சிறப்புப் புரதத்தை வெளிவிடும்விதமாக சோதனை சாலையில் மரபணு மாற்றம் செய்யப்பட்டு மீண் டும் நோயாளியின் உட லினுள் செலுத்தப்படுகின்றன. டி செல்கள் புற்று நோய் செல்களை கண்டறிந்து அவற்று டன் போரிடுவதற்கு கார் புரதம் உதவி செய்கிறது. இந்த முறை இந்தியாவிலேயே சுயேச்சையாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்திய தொழில்நுட்பக் கழகம்,மும்பை மற்றும் டாட்டா மெமோரியல் மருத்துவமனையால் உள்ளு றையாக வளர்க்கப்பட்ட(incubated) இம்யூனோஆக்ட் (ImmunoACT) எனும் நிறுவனம் இதை செய்துள்ளது. நெக்ஸ்கார்19 (NexCAR19) என்று பெயரிடப்பட்டுள்ள இதற்கு இந்திய மத்திய மருத்துவ தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அக்டோபர் 2023இல் அங்கீகாரம் அளித்துள்ளது. இந்தியாவில் 10க்கும் மேற்பட்ட நகரங்களில் 30க்கும் அதிகமான மருத்துவமனைகளில் இது கிடைக்கிறது. பி செல் புற்று நோய் எனப்படும் இரத்தபுற்று நோய்களினால் பாதிக்கப்பட்ட 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இது அளிக்கப்படுகிறது. இதன் மூலம் வி.கே.குப்தா என்பவர் முதன்முதலாக குணப்படுத்தப்பட்டுள்ளார். வெளிநாட்டில் ரூ 4/ கோடி செலவாகும் இதற்கு இந்தியாவில் 42 லட்சம் மட்டுமே செலவானதாம்.
காற்று மாசும் மகரந்தச் சேர்க்கையும்
ஹாக்மோத் எனும் அந்துப் பூச்சிகள் பிரிம்ரோஸ் மலர்களில் இரவு நேரங்களில் மகரந்தச் சேர்க்கை செய்வது பாதிக்கப்படுவது ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. பூக்களிலிருந்து வீசும் மணத்தின் மூலமே பூச்சிகளும் பறவைகளும் அவற்றை நாடி தங்களுக்குத் தேவையான தேனை உண்கின்றன. அதன் மூலம் பூக்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. பூக்களின் மணத்திற்கு சில வேதிப்பொருட்களே காரணம். ஆனால் மனிதர்களின் செயல்பாடுகள் மூலம் காற்றில் கலக்கும் ஓசோன், நைட்ரேட் போன்ற மாசுகளால் மணம் பரப்பும் வேதிப்பொருட்கள் சிதைக்கப்படுகின்றன. எனவே பூச்சிகளால் மணத்தை நுகர இயலாது. இது உலகளவில் மகரந்தச் சேர்க்கையை குறைத்துவிடலாம்.
உன் சமயலறையில் சோடியமா, பொட்டாசியமா?
சமையல் உப்பு எனப்படும் சோடியம் குளோரைடு அதிகம் எடுத்துக் கொள்வதால் இரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை ஏற்படுகின்றன என்பது அறிந்ததே. ஆனால் சமையலில் உப்பைக் குறைப்பதோ, உணவை வேறுவிதமாக பதப்படுத்துவதோ, குறைவான உப்பு கலந்த உணவுப் பொருட்களை வாங்குவதோ பலருக்கு கடினமானதாக இருக்கிறது. இப்போது இதற்கு ஒரு எளிமையான அதே சமயம் நல்ல பலனளிக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. பொட்டாசியம் செறிவூட்டப்பட்ட உப்பே அது. பெரும்பாலானோர் இந்த உப்பின் சுவையில் முக்கிய வேறுபாடு எதுவும் காணவில்லை. சோடியம் குறைவான உப்பு, பொட்டாசியம் உப்பு, இதய உப்பு, தாது உப்பு என இது பலவாறு அழைக்கப்படுகிறது. இரத்த அழுத்தம் அதிகமாவதற்கு பொட்டாசியம் குறைபாடு ஒரு பெரிய காரணியாகும். சோடியம் உட்கொள்வதை குறைத்து பொட்டாசியம் உட்கொள்வதை அதிகப்படுத்துவதாலும் இந்த உப்பு இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. பொட்டாசியம் பெரும்பாலும் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றிலிருந்து கிடைக்கிறது. 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதான 20995 நபர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், செறிவூட்டப்பட்ட பொட்டாசியம் உப்பிற்கு மாறுவதால் இரத்த அழுத்தம் குறைகிறது; பக்கவாதம், மாரடைப்பு மற்றும் அகால மரணம் ஆகியவை ஏற்படும் அபாயம் குறைகிறது என்று தெரியவந்துள்ளது. இந்த சோதனையில் பங்கெடுத்தவர்கள் பக்கவாதத்தினால் பாதிப்புக்கு உள்ளானவர்கள்; அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள். மேலும் 21 ஆய்வுகளை பரிசீலித்தபோது உலக மக்கள் தொகையில் கணிசமானவர்கள் பொட்டாசியம் செறிவூட்டப்பட்ட உப்பிற்கு மாறுவதால் பலனடைவார்கள் என்று தெரியவந்துள்ளது. உலக சுகாதார நிறுவனமும் தனது 2023உலக அறிக்கையில் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் பக்கவாதம் போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கவும் பொட்டாசியம் செறிவூட்டப்பட்ட உப்பு ‘கட்டுபடியான உத்தி’ என்று கூறுகிறது. இந்த ஆய்வு அமெரிக்க இதய சங்கத்தின் இதழான ஹைப்பர் டென்ஷனில் வெளிவந்துள்ளது. சாதாரண உப்பைவிட இந்த உப்பு விலை அதிகம் என்றாலும் அதன் பலன்கள் அதிகம். கவர்ச்சிகரமான பெயர்களில் விற்கப்படும் பல உப்புகளை விட இதன் விலை குறைவானதுதான். சீனாவிலும் ஐரோப்பாவிலும் மட்டுமே இந்த உப்பு உட்கொள்வது வழிகாட்டியாக செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் உயர் வருமான நாடுகளிலே இது விற்கப்படுகிறது. ஹைப்பர் கலீமியா எனப்படும் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு இது பரிந்துரைக்கப்படுவதில்லை.