tamilnadu

img

முன்னெச்சரிக்கையில் அலட்சியமே 5 பேர் உயிரிழக்க காரணம் !

சென்னையில் ஞாயிறன்று (அக்.6)   விமான சாகசத்தை கண்டு களித்துவிட்டு வீடு திரும்பியபோது 5 பேர்  உயிரிழந்த சோகம் காண்போரை கண்கலங்க  வைத்தது. விமான சாகச நிகழ்ச்சியைக் காண  சுமார் 15 லட்சம் பேர் ஒரே நேரத்தில் திரண்டனர்.  நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேறியதால் கூட்ட  நெரிசல் மற்றும் வாகன நெரிசல் ஏற்பட்டது.  அதுவும் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டி இருந்ததால் குழந்தைகள், சிறுவர்கள்,  வயோதிகர்கள், உடல்நலம் குன்றியவர்கள், பெண்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி னர். இவர்களில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த னர். விமான சாகச  காட்சியை கடும் வெயிலில்  சுமார் 3 மணிநேரம் பார்த்ததால் பலர் வெயில் தாங்க முடியாமல் மயக்கமடைந்தனர். இறந்தவர்களில் சென்னை கொருக்குப் பேட்டை, அனந்தநாயகி நகரைச் சேர்ந்த ஜான்(56) என்பவரும் ஒருவர். இவர் வீட்டிலேயே சொந்தமாக பிரிண்டிங் பிரஸ்  தொழில் செய்து வந்தார். விமான சாகச நிகழ்ச்சியை எப்படியாவது நேரில் பார்வை யிட வேண்டும் என்ற ஆசையில் மனைவி  மற்றும் உறவினர்களுடன் அதிகாலை யிலேயே மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார்.  பின்னர், அங்கு நடைபெற்ற விமான சாகசத்தை கைதட்டி, ஆரவாரம் செய்து உற்சாகமாக பார்த்துவிட்டு குடும்பத்தினரிடம் மெரினாநீச்சல் குளம் பின்புறம் வழியாக சென்றபோது திடீரென அங்கேயே மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், ஜானை மீட்டு அருகில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் ஜான் ஏற்கெனவே  இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இதேபோன்று, புதுபெருங்களத்துரை சார்ந்த ஸ்ரீனிவாசன்(48) என்பவரும் மெரினா வுக்கு வந்திருந்தார். தாம்பரம் அரசு  மருத்துவமனையில் சிடி ஸ்கேன் தொழில் நுட்ப வல்லுநராக வேலை பார்த்து வந்த ஸ்ரீனி வாசனுக்கு வனிதா என்ற மனைவி, ஹேமந்த் (15) என்ற மகன், வர்ஷா(11) என்ற மகள் உள்ளனர். மகள் வர்ஷாவின் ஆசையை  நிறைவேற்ற வேலை நாளான ஞாயிற்றுக் கிழமை மாற்று விடுப்பு எடுத்துக் கொண்டு மகளை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் மெரினா வந்திருந்தார்.  நிகழ்ச்சி முடிந்து மகளுடன் வீடு திரும்பியபோது சேப்பாக்கத்தில் எம்எல்ஏ விடுதி அருகே வழி யில் இருசக்கர வாகனத்திலிருந்து மயங்கி கீழே விழுந்த ஸ்ரீனிவாசன், மகள் கண் எதிரே  உயிரிழந்தார். இதைக் கண்டு அவரது மகள் கதறி அழுத்து காண்போரை கண்கலங்கச் செய்தது.  இதேபோல் திருவொற்றியூர் ஆர்.எம்.வி  நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் (34) என்பவர்  மனைவி சிவரஞ்சனி மற்றும் 3 வயது மகனு டன் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க  வந்திருந்தபோது உயிரிழந்தார். மனைவி,  மகனை நேப்பியர் பாலம் அருகே விட்டு விட்டு, அருகில் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை எடுக்கச் சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. 2 மணி நேரத்துக்கு பிறகே அவர் மயங்கி இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சிவரஞ்சனி கண்ணீர் மல்க கூறும்போது, ‘மதியம் 1.20 மணியளவில் நேப்பி யர் பாலம் அருகே வந்தோம். அங்கு எங்களை  அமர வைத்துவிட்டு, இருசக்கர வாகனத்தை  எடுத்து வருகிறேன் என சென்றவர் திரும்ப வில்லை. செல்போனில் அவரை தொடர்பு கொண்டபோது அவர் எடுக்கவில்லை. மதியம்  3.30 மணியளவில் எனது செல்போனில் தொடர்பு கொண்ட ஒருவர் இங்கு ஒருவர் மயங்கி கிடக்கிறார் என்று தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்து அவர் கூறிய இடத்துக்கு சென்றபோது கணவர் அசைவின்றி கிடந்தார். உடனே கணவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். காவல்துறை உரிய நேரத்தில் அவரை மீட்டு  மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தால் காப்பாற்றி இருக்கலாம்’ என்றார். இதேபோல், சென்னை மடுவாங்கரை யைச் சேர்ந்த தினேஷ் குமார், ஆந்திராவைச்  சேர்ந்த மணி (55) ஆகியோரும் மெரினாவில் மயங்கிய நிலையில் உயிரிழந்திருந்தனர். இவர்களது பின்னணி குறித்து காவல்துறையி னர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். ஒட்டு  மொத்தத்தில் 5 பேரின் மரணமும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விமானக் காட்சி முடிந்த பிறகு, கடற்கரை யில் கூடியிருந்த அனைவரும் ஒரே  நேரத்தில் அங்கிருந்து வெளியேற முயன்ற போது, கடற்கரையை ஒட்டியுள்ள அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமையன்று வெயி லின் தாக்கமும் வழக்கத்தைவிட அதிகமா கவே அதாவது, 34.3 முதல் 35 டிகிரி அளவுக்கு  இருந்தது. இது இயல்பான அளவைவிட 0.8 முதல் 1.5 டிகிரி அளவுக்கு அதிகம் என  சென்னை வானிலை ஆய்வுமையத்தின் வெப்பநிலை அறிக்கை குறிப்பிடுகிறது. நெரிசல், வெயில், குடிக்க குடிநீர் கிடைப்பதில் ஏற்பட்ட சிரமம் ஆகியவற்றால் விமானக் காட்சியைப் பார்க்க வந்தவர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டனர். இருநூற்றுக்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். இவர்களில் 90-க்கும் மேற்பட் டோர் ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவ மனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை ஆகிய வற்றில் சிகிச்சைபெற்று வீடு திரும்பினர்.  விமான சாகச காட்சியை இந்திய விமானப்படை நடத்தியபோதும் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தது தமிழக அரசுதான். அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படக்கூடாது என்று கருதிய அரசு நெரிசல் ஏற்படாதவாறு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கவேண்டும். பொதுமக்கள் சொந்தமாக குடை தண்ணீர் தொப்பி கொண்டுவந்தபோதிலும் மாநில அரசும் ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகளை வைத்திருக்க வேண்டும், பெயரளவுக்கே தண்ணீர் தொட்டிகளை காண முடிந்ததாக பொதுமக்கள் கூறினர். வைக்கப்பட்டிருந்த பல தொட்டிகளில் ஒரே ஒரு குழாய் மட்டுமே  பொருத்தப்பட்டிருந்ததால், அதில் நீரைப் பிடிக்க பார்வையாளர்கள் நீண்ட வரிசைகளில்  காத்திருந்தனர். மெரினா கடற்கரையில் கடை வைத்திருந் தவர்கள் கூட்டத்தை எதிர்பார்த்திருந்தனர் என்றாலும் இவ்வளவு பெரிய கூட்டத்தை எதிர்பார்க்கவில்லையென்பதால், அவர்க ளிடம் இருந்த தண்ணீர், குளிர் பானங்கள் போன்றவையும் ஒன்றிரண்டு மணி நேரத்தில்  விற்றுத் தீர்ந்தன. இதனால், பலர் குடி நீருக்காக அலைபாய்ந்தனர்.

ஆம்புலன்சுக்கு தனிப்பாதை இல்லை!

நெரிசல் ஏற்பட்டால் அல்லது  கடும் வெயிலில் யாராவது நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மயங்கி விழுந்தால் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்சுக்கு தனிப்பாதையை ஏற்படுத்தியிருக்கவேண்டும், மயங்கி  விழுந்தவர்களில் சிலருக்கு உடனடி மருத்துவ  உதவி அளிக்கப்படவில்லை என்று அவர்களை  பறிகொடுத்த உறவினர்கள் குற்றம்சாட்டினர்.  விமான சாகச நிகழ்ச்சியை ஒட்டி மெரினா கடற்கரை, அதனை ஒட்டிய சாலைகள், ரயில்  நிலையங்களில் ஏற்பட்ட நெரிசல் குறித்து விளக்கமளித்த மருத்துவத் துறை  அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்திய விமானப் படை கேட்டுக்கொண்ட எல்லா ஏற்பாடுகளையும் செய்துதந்ததாக குறிப்பிட்டார். ஆனால், மரணங்கள் குறித்து ஏதும் குறிப்பிடவில்லை. ஆனால், பல்வேறு அரசியல் கட்சியினரும் உயிரிழப்புகள் குறித்து  அறிக்கைகளை வெளியிட்ட பின்னர் மா. சுப்பிர மணியன், மரணங்களை உறுதிசெய்தார். 

சிந்தாதிரிப்பேட்டை முதல் வேளச்சேரி வரையிலான வழித்தடத்தில் இயங்கிய பறக்கும் ரயில் சேவை, இந்தக் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் இயக்கப்படாதது பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. மெரினா கடற்கரையை ஒட்டி யுள்ள காமராஜர் சாலை, அண்ணா சாலை,  வாலஜா சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை  உள்ளிட்ட சாலைகளில் விமான சாகசம் முடிந்து  பல மணி நேரத்திற்கு போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டது. இந்தப் போக்குவரத்து நெரிசலில் பல ஆம்புலன்சுகளும் சிக்கிக்கொண்டன.  ஒரே நேரத்தில் இத்தனை லட்சம் பேர்  ஒரு விமான சாகச நிகழ்ச்சியை கண்டு ரசித்தது சாதனையாக முன்னிறுத்தப்பட்டாலும், இந்த நிகழ்வு தொடர்பாக ஏற்பட்ட உயிரிழப்புகள் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.   பெரிய அளவில் மக்கள் கூடும் இடங்களில்  மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாகவும் ஒரு ஒத்திகை தேவைப்படுகிறது. மேலும் பெரிய நிகழ்ச்சி களை நடத்தும்போது கால நிலையையும் கருத்தில் கொள்ளவேண்டும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ள கருத்தை யும் புறந்தள்ள முடியாது. சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் கொதித்துக் கொண்டிருக்கிறது என்பதை அரசும் விமானப்படையும் அறியும். இருந்தும் கவனக்குறைவாக இருந்ததால் காப்பாற்ற வாய்ப்பிருந்தும்  5 பேரின் உயிர் பறிபோனது மிகவும் சோகமானது.