ஈரோடு, மார்ச் 7- சத்திய மங்கலம் அருகே, காதல் திருமணம் செய்து கொண்ட ஆத்திரத்தில், சாதி ஆதிக்க வெறியோடு வாகனத்தை ஏற்றி திட்டமிட்டு விபத்து ஏற்படுத்தியதில், 10 ஆம் வகுப்பு பயிலும் சிறுமி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், உத்தண்டியூர், எரங்காட்டூர், குருவாயூரப்பன் நகரைச் சேர்ந்தவர் சுபாஷ் (24). பட்டியலினத்தை சேர்ந்த இவரது தந்தை ஜெயப்பிரகாஷ் அரசுப் பேருந்து ஓட்டுநராக உள்ளார். இந்நிலையில், கடந்த 8.10.2023 அன்று சத்தியமங்கலம், காந்தி நகரில் வசிக்கும் வேறு ஒரு சமூகத்தைச் சேர்ந்த சந்திரன் - சித்ரா ஆகியோரது மகள் மஞ்சுவை சுபாஷ் காதல் திருமணம் செய்து கொண்டார். இதை மஞ்சுவின் பெற்றோர் ஏற்கவில்லை. இதனால் இராமேஸ்வரம் சென்று திருமணம் செய்துள்ளனர். பின்னர், திரும்பி வந்து சத்தியமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் தங்கள் திருமண வாழ்விற்கு ஆபத்து இருப்பதாகப் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் புதனன்று காலை 10ஆம் வகுப்பு மாணவியான தனது தங்கை ஹாசினியை பள்ளிக்கு அழைத்துச் சென்றார் சுபாஷ். அவர்கள் இருவரும் எரங்காட்டூர் நெசவாளர் காலனி அருகே சென்ற போது பின்னால் வந்த நான்கு சக்கர வாகனம் இவர்கள் மீது மோதியது. அதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். மோதிய வாகனத்திலிருந்து இறங்கி வந்த சந்திரன், சுபாஷ் அருகே வந்து, இன்னும் சாகலையா, இத்தோடு செத்து ஒழிஞ்சீங்கடா என்று ஆணவத்துடன் மிரட்டிவிட்டுச் சென்றுள்ளார்.
விபத்து நடந்த சத்தம் கேட்டு வந்த அப்பகுதியிலிருந்தவர்கள் பலத்த காயங்களுடன் இருவரையும் மீட்டு சத்தியமங்கலம் ரித்திஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், தலை மற்றும் இடுப்பில் பலத்த காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லப்பட்ட ஹாசினி வழியில் உயிரிழந்தார். இதனையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டு வியாழனன்று பிற்பகலில் அடக்கம் செய்யப்பட்டார். சுபாஷ், கோவை கங்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பட்டியலின மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டம், இபிகோ 326, 307 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் பவானிசாகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவானவர்களைத் தேடி வருகின்றனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் மேற்கண்ட கொடிய சம்பவத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், “மேற்கண்ட சம்பவத்தில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டப்படியான பாதுகாப்புகள் அனைத்தையும் வழங்கிட வேண்டும். தொடரும் ஆணவப் படுகொலைகளை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது’’ என வலியுறுத்தியுள்ளது. ஆறுதல் இந்நிலையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஈரோடு மாவட்டத் தலைவர் பி.பி.பழனிச்சாமி, மாவட்டச் செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் உடனடியாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, சட்டப்படியான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.