மகனைப் பார்க்கச் சென்ற தாயை கட்டிவைத்து அடித்த கொடுமை: நடவடிக்கை எடுக்க ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்
புதுக்கோட்டை, ஜுன் 1- பெற்ற மகனைப் பாரக்கச் சென்ற தாயை, மரத்தில் கட்டி வைத்து பெண்ணை கொடுமைப் படுத்திய சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது. இதற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை அடுத்த திருமணஞ்சேரியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகள் முத்துலெட்சுமி. இவருக்கும் தஞ்சாவூரைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு லிங்கேஸ்வரன்(7) என்ற மகன் உள்ளார். இந்நிலையில், கணவரின் கொடுமை தாங்காமல் முத்துலெட்சுமி, தனது மகன் லிங்கேஸ்வரனுடன் கடந்த சில வருடங்களாக தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், மகன் லிங்கேஸ்வரனை, தாய் முத்துலெட்சுமிக்குத் தெரியாமல் கணவர் சங்கர் கடந்த இரண்டரை மாதத்திற்கு முன்பாக கடத்திச் சென்றுள்ளார். மகனை தன்னுடன் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி காவல் நிலையத்திலும். குழந்தைகள் நலக் காப்பகத்திலும் முத்துலெட்சுமி தொடர்ந்து முறையிட்டு வந்துள்ளார். இந்நிலையில், மகன் லிங்கேஸ்வரன் புதுக்கோட்டை உசிலங்குளம் பகுதியில் உள்ள தனது நாத்தனார் சரண்யா வீட்டில் இருப்பதாக முத்துலெட்சுமிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தனது அக்காள் மகனுடன் குழந்தையைப் பார்க்க அங்கு முத்துலெட்சமி சென்றுள்ளார். தாயைப் பார்த்ததும் குழந்தை லிங்கேஸ்வரன் ஓடிவந்துள்ளான். மகனை கட்டி அணைத்து கொஞ்சியபோது, நாத்தனார் சரண்யா, அவரது கணவர் மகேந்திரன் உள்ளிட்டோர் முத்துலெட்சுமியை சரமாரியாகத் தாக்கி கொடுமைப் படுத்தியுள்ளனர். மேலும், முத்துலெட்சுமியின் கழுத்தில் கிடந்த தாலியை அறுத்தும், உடைகளைக் கிழித்தும், மரத்தில் கட்டி வைத்தும் கடுமையாகத் தாக்கி உள்ளனர். உடல் அளவிலும், மனதளவிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட முத்துலெட்சுமி, தற்போது, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பாண்டிச்செல்வி, செயலாளர் பி.சுசிலா, மாவட்டக்குழு உறுப்பினர் வி.கலைச்செல்வி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், தாக்குதல் நடத்திய முத்துலெட்சுமியின் நாத்தனார் சரண்யா, அவரது கணவர் மகேந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தையை தானும் வளர்க்காமல், தாயிடமும் ஒப்படைக்காமல் உறவினர் வீட்டில் விட்டுவிட்டு எந்நேரமும் குடிபோதையில் முத்துலட்சுமியின் கணவர் இருந்து வருகிறார். எனவே, குழந்தையை தாயிடம் ஒப்படைப்பதற்கும், பாதிக்கப்பட்ட முத்துலெட்சுமிக்கு உரிய நிவாரணம் கிடைப்பதற்கும் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாதர் சங்க மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.