நாய்களின் ‘குழந்தைப் பார்வை’ எதனால் உண்டாகிறது?
நாய்கள் வெளிப்படுத்தும் ‘குழந்தைப் பார்வை’(Puppy dog eyes’) மனிதர்கள் அவற்றை வளர்ப்புப் பிராணிகளாக்கியதால் என்று நம்பப்பட்டது. ஆனால் கயோட்டி எனப்படும் அமெரிக்க நரியும் இவ்வகை பார்வையை காட்டுகிறது என்று தெரிய வந்துள்ளது. இந்தப் பார்வைக்கு உள் இமைகளை மேலாக தூக்கும் LAOM எனும் தசை முக்கியமானது. கயோட்டி விலங்குகளிலும் இந்த தசை நன்கு வளர்ச்சியடைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. நாய், கயோட்டி மற்றும் பழுப்பு ஓநாய்களின் முக தசைகளை ஒப்பிட்டதில், முதல் இரண்டிலும் LAOM நன்கு வளர்ச்சியடைந்திருப்பதும் மூன்றாவதில் அவை மாறுபட்டோ அல்லது இல்லாமலோ காணப்பட்டன. மனிதர்கள் வளர்ப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாலே நாய்களில் உள் இமைகள் தூக்குவது வளர்ச்சியடைந்தது எனும் கருத்தை இது கேள்விக்குள்ளாக்குகிறது. மாறாக நாய்கள், கயோட்டி, பழுப்பு ஓநாய்கள் ஆகியவை ஒரு பொதுவான முன்னோரிலிருந்து தோன்றியிருக்கலாம். அதற்கு LAOM இருந்திருக்கும். பிற்பாடு ஓநாய்களில் அவை மறைந்திருக்கலாம் அல்லது குறைந்திருக்கலாம். இது ‘ராயல் சொசைட்டி ஓப்பன் சயின்ஸ்’ எனும் இதழில் வந்துள்ளது.
அதிகரிக்கும் வெப்பத்தை சமாளிக்கும் நுண் துளைகள்
தாவரங்கள் இலைகளிலுள்ள ஸ்டோமேட்டா எனும் நுண் துளைகள் மூலம் சுவாசிக்கின்றன; ஒளிச்சேர்க்கை செய்கின்றன என்பது அறியப்பட்டதே. கூடுதலாக, அதிகரித்துவரும் வெப்ப நிலையையும் அவற்றின் மூலம் சமாளிக்கின்றன என்பது ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. சாண்டியாகோவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள், தாவரங்கள் அதிகரிக்கும் வெப்பத்தை ஸ்டோமேட்டல் துளை மூலம் சுவாசிப்பதையும் நீராவி வெளியிடுதலையும் அதிகரித்து சமாளிக்கின்றன என்று காட்டியுள்ளார்கள். இதற்கு இரண்டு விதமான முறைகளையும் அவை கடைப்பிடிக்கின்றன. முதல்முறையில் கார்பன் டை ஆக்சைட் உணர்விகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வெப்பம் அதிகரிக்கும்போது துளைகள் விரிந்து அதிக கார்பன் டை ஆக்சைடை எடுத்துக் கொண்டு ஒளிச்சேர்க்கை அதிகரிக்கின்றன. ஆனால் வெப்பம் இன்னும் மிகுதியாகும்போது ஒளிச்சேர்க்கை குறைகிறது. அப்போது கார்பன் டை ஆக்சைடு உணர்வி முறையை தவிர்த்துவிட்டு ‘வியர்வை’ முறையில் வெப்பத்தை தணிக்கின்றனவாம். இந்த ஆய்வு ‘New Phytologist’ எனும் இதழில் வெளிவந்துள்ளது.
குடல் நுண்ணுயிரிகளும் நரம்பு கோளாறுகளும்
ஆட்டிஸம் எனும் குறைபாட்டிற்கும் குடலிலுள்ள நுண்ணுயிரிக் கூட்டத்திற்கும் தொடர்பு உண்டா என்கிற கோணத்தில் ஒரு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சுவீடன் நாட்டில் 17000 குழந்தைகளை பிறப்பிலிருந்து கண்காணிப்பு செய்யப்பட்டது. இவர்களில் 1200 நபர்களுக்கு பின்னாளில் நரம்பியல் தொடர்பான கோளாறுகள் ஏற்பட்டன. இவர்களது உடலில் நுண்ணுயிரி சேர்மானம் மற்றும் வளர்சிதை பொருட்களின் அளவு ஆகியவற்றில் கணிசமான மாறுதல்கள் காணப்பட்டன. குழந்தையின் தொப்புள்கொடி இரத்தம்(CORD BLOOD) மற்றும் மலங்களை பரிசோதித்ததில் இவை தெரிய வந்துள்ளன. நரம்பியல் கோளாறுகளின் அறிகுறிகள் தென்படுவதற்கும் முறையான கண்டுபிடிப்பிற்கும் முன்பே இவை உண்டாகின்றன. நரம்பு மண்டல சமிக்கைகளை கடத்துவதற்கு உதவும் நுண்ணுயிரிகளும் அவற்றின் வளர்ச்சிக்கு தேவையான கொழுப்பு மூலகங்கள் மற்றும் பித்த அமிலம் ஆகியவை குறைவாக உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. குடலில் உள்ள நுண்ணுயிரிக் கூட்டம் குழந்தைப் பருவத்தில் பெரும் மாறுதலுக்கு உட்படுகிறதாம். இவை நோய் எதிர்ப்பு மண்டலம், வாழ்க்கை முறைகள், மரபணு, சுற்றுச்சூழல், தொற்று மற்றும் மருந்துகளால் ஏற்படுகிறதாம். மேலும் ஆட்டிசம் மற்றும் ADHD எனப்படும் கவனக்குறைவு அதீத செயல்பாடு ஆகிய கோளாறு உள்ளவர்களுக்கு குடல் சம்பந்தமான நோய்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. ஒரு சிறிய முன்சோதனையில், ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்கு ஆரோக்கியமான நுண்ணுயிரிகளை செலுத்தியபோது ஆட்டிசம் மற்றும் குடல் நோய்களில் முன்னேற்றம் காணப்பட்டது. சில பலன்கள் இரண்டு ஆண்டுகள் வரை நீடித்ததாம்.
காதோரம் லோலாக்கு
ஜோஹன்னஸ் வெர்மீர் என்பவரின் ‘முத்து தோடுடைய பெண்’ எனும் ஓவியம் உலகளவில் மிகப் பிரபலமான ஒன்றாம். ஏன் அது எல்லோரையும் கவர்கிறது என்பதற்கு அறிவியல் ரீதியான விளக்கம் ஒன்று கிடைத்துள்ளதாம். அந்த ஓவியம் தி ஹேக் அருங்காட்சியகத்தில் உள்ளது. அந்த ஓவியத்தையும் மற்ற ஓவியங்களையும் பார்க்கும்போது பார்வையாளர்களின் மூளையில் ஏற்படும் மாறுதல்களை நரம்பியல் அறிவியலாளர்கள் அளவிட்டனர். ‘முத்து தோடு பெண்’ ஓவியத்தைப் பார்க்கும்போது ‘ நீடித்த கவன வளையம்’ எனும் நிகழ்வின் மூலம் பார்வையாளர்கள் அதனுடன் ஒன்றிவிடுகிறார்களாம். இந்த நிகழ்வு இந்த ஓவியத்திற்கே உரிய தனித்துவமானது என்று அவர்கள் கருதுகிறார்கள். பார்வையாளர்களின் கண்கள் தன்னிச்சையாக பெண்ணின் கண்களை நோக்குகிறது; பின் அவளின் வாய், அதன்பின் தோடு என செல்கிறதாம். மீண்டும் பார்வை அவளது கண்களுக்கு திரும்பி இந்த வளையம் தொடர்கிறது. இதனால் மற்ற ஓவியங்களை விட கூடுதல் நேரம் இதை பார்வையிடுகிறார்கள் என்கிறார் இந்த ஆய்வை நடத்திய நிறுவனத்தை சேர்ந்த மார்டின் முன்னிக். இந்த ஓவியங்களைப் பார்க்கும்போது மூளையில் நிகழும் மாற்றங்களை ஈஈஜி மற்றும் எம்ஆர்ஐ ஆகியவை கொண்டு கணக்கிட்டனர். நமது உணர்வு மற்றும் தனிப்பட்ட அடையாளம் ஆகியவற்றை நிர்வகிக்கும் மூளையின் பகுதி மிக அதிகமாக தூண்டப்படுவது தெரிய வந்துள்ளது. ‘ஒருவரை நாம் நீண்ட நேரம் பார்க்க பார்க்க அவர் அழகாகவும் கவர்ச்சிகரமாகவும் தெரிகிறார்’ என்கிறார் முன்னிக்.