மணிமொழி மகிழ்ச்சியாக இருந்தாள். நாளை முதல் விடுமுறை. அதுவும் பத்து நாட்கள். முதல் பருவத்தின் கடைசி நாள்.
நண்பர்களுடன் சிரித்துப் பேசினாள்.
கேலியும், கிண்டலும்.
அவை குழந்தைத்தனமான ரகசியங்கள்.
“கனி ! உங்கம்மா நல்லவங்க.” என்றாள் வசந்தி.
“எல்லா அம்மாவும் நல்லவங்கதான்.” இது மணிமொழி.
“இங்கே போகாதே! அங்கே நிற்காதே!”
“ஆம்பள மாதிரி விளையாடாதே !”
“கிரிக்கெட் மட்டையை எடுக்காதே. கையை ஒடிப்பேன்.”
“பசங்கச் சட்டை அணியாதே!”
“பசங்களோட சேராதே!”
இப்படி பல குரல்கள்.
தாய்மார்களின் குரல்கள். குழந்தைகளை இடிபோல் தாக்கியவை.
“எல்லாம் நம்ம நல்லதுக்குதான்.” என மணிமொழி சிரித்தாள்.
“அங்க என்ன சிரிப்பு? பரீட்சை எழுத போங்க.” இது அதிகாரத்தின் குரல். வகுப்பு ஆசிரியர் குரல்.
அனைவரும் வகுப்பறைக்குள் சென்றனர். தேர்வு எழுதத் தொடங்கினர். மணி ஒலித்தது.
கடைசித் தேர்வு முடிந்தது.
பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறந்தன. மகிழ்ச்சியுடன் வீடு திரும்பின.
மணிமொழி சீருடையை கழட்டி எறிந்தாள். அண்ணனின் கால்சட்டையையும், தம்பியின் சிவப்புச் சட்டையையும் அணிந்து கொண்டாள். கிரிக்கெட் மட்டையை எடுத்தாள். தெருவுக்குள் ஓடினாள்.
மணிமொழி பதினொரு வயது சிறுமி. வயதுக்குரிய உடல்வாகு.
“சுரேஸ்! வாடா ! “
“பஸ்ட் பேட்டிங்.” - இது கணேஷ்.
“நான் கீப்பிங்” என்றான் மனோஜ்.
இவர்களுடன் சிலரும் இணைந்து கொண்டனர்.
மொத்தம் பத்து பசங்க.
மணிமொழி பந்து வீசத் தயாரானாள். ஓடிவந்தாள், குதித்தாள், பந்தை வீசினாள்.
பந்து மட்டையில் படாமல் சென்றது.
“ஆம்பளை மாதிரி பந்து வீசுறா!” என்றார் பக்கத்து வீட்டு மாமா.
விக்கெட் எடுத்தாள். பந்தைத் தாவிப் பிடித்தாள். பந்தைத் தடுத்தாள். பந்தை எறிந்தாள்.
ஒவ்வொரு முறையும் மகிழ்ச்சி. ஆராவாரம். கூச்சல்.
உடம்பெல்லாம் தெருவின் புழுதி.
இருட்டியது.
அவளது இளைய சகோதரன் ‘ஒளிந்துப் பிடித்து’ விளையாட அழைத்தான். இப்போது இவர்களுடன் சில பெண் குழந்தைகளும் சேர்ந்து கொண்டனர்.
சாட் பூட் த்ரி.
ஆயிஷா கண்களை மூடினாள். அவள் விளக்கு கம்பத்தின் முன் நின்றாள். ஒன்று, இரண்டு , மூன்று என எண்ணினாள். ‘ரெடி’ என குரல் ஒலித்தது. ஒளிந்தவர்களைத் தேடிச் சென்றாள்.
“சுதன் ஒண்ணு.”
“பாத்ரூம்குள் இரண்டு.”
“மாடியில் மூணு.”
அனைவரையும் கண்டுபிடித்தாள்.
அடுத்து சுதன்.
ஒன்று. இரண்டு, மூன்று ,... ,பத்து.
ரம்யா ஒண்ணு .
இப்படி விளையாட்டுத் தொடர்ந்தது.
மணிமொழி சந்துபொந்துகளில் ஓடி மறைந்தாள். காம்பவுண்டு சுவர் ஏறி குதித்தாள். டீக்கடைக்குள் மறைந்து கொண்டாள். பலசரக்குக் கடையில் ஒளிந்தாள். அவளைக் கண்டுபிடிக்கச் சிரமப்பட்டனர்.
அம்மா அண்ணனை அனுப்பி அழைத்தாள்.
இரவு ஏழு மணி.
மணியின் தலைமுடி பரட்டையாக இருந்தது. முகம், கை, கால் எங்கும் அழுக்கு. உடையெல்லாம் தூசி.
“அப்பா! “ என சிரித்து ஓடினாள்.
“செல்லம்! முகம் கழுவிட்டுப் படிங்க.” என்று கூறும் அப்பா, இன்று பேசவில்லை. அவரது முகம் இறுகி இருந்தது. அவளது சகோதரர்கள் அமைதியாகப் படித்தனர்.
அவள் முகம்கழுவி வந்தாள். அம்மா அடுப்படிக்கு அழைத்தார்.
“இந்தா டீ குடி.” என அம்மா இணக்கமாகப் பேசினார்.
டீயை உறிஞ்சி குடித்தாள்.
“என்னடி விளையாண்டு முடிஞ்சாச்சா. பாக்கி இருக்கா!”
“நாளையில் இருந்து லீவு.”
“நான் சொல்றதைக் கேளு?”
“ம்..சொல்லுங்க. அம்மா, லீவுக்கு புட்பால் கத்துக்கவா! “ என மணி ஆர்வமாகக் கேட்டாள்.
“சரி! சரி! அமைதியாக் கேளு.” என அம்மா அதட்டினார். அது அதட்டல் இல்லை. கறாரானப் பேச்சு.
“எதிர் வீட்டு அங்கிள், பலசரக்கடை பாலு மாமா வந்தாங்க.”
“அவுங்களுக்கு என்னவாம்?”
“நீ வளர்ந்துட்டீயாம்.அப்புறம்...”
“அப்புறம்ன்னு இழுக்காமல் சொல்லுங்கம்மா?”
“இனி பசங்கச் சட்டைப் போட வேண்டாமாம்.”
“எதுக்கு?”
“அம்மாவை போல் ஜாக்கெட் அணிந்து கொள்ளணும். இனித் தெருவிற்குச் செல்லக்கூடாது. விளையாடக்கூடாது. முக்கியமா பசங்கக் கூடச் சேரக்கூடாது.”
அவள் மறுத்துப் பேச முனைந்தாள்.
“அம்மா, என்கிட்ட பசங்கச் சட்டைதானே அதிகம். “
“புதுசா பாவடைச் சட்டை எடுத்துத் தர்றேன்.”
“விளையாட்டு ரொம்ப பிடிக்குமே. நீ சொல்றதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?”
“உன்மேல் பயங்கரமானக் கோபத்தில் அப்பா இருக்கார். இனித் தெருவுக்குப் போகக் கூடாதுன்னு கறார சொல்லிட்டார்.”
“சரி! பசங்கக் கூட ஏன் பேசக் கூடாது? வகுப்பில் பத்து பசங்கப் படிக்கிறாங்க. “
“சும்மா பேசினதையே பேசாத! அப்பாவுக்குப் பிடிக்கலை. இதுக்கு மேல் பேச ஒண்ணுமில்லை. “ என உறுதியானக் குரலில் பேச்சை முடித்துக் கொண்டார்.
“அம்மா! விளையாடலைன்னா போர் அடிக்குமே! “
“பாலு மாமா கடைக்கு வரச் சொல்லி இருக்கார். “
“எதுக்கு?”
“வேலைக்குதான். உனக்கும் பொழுதுபோகும். சம்பளமும் கிடைக்கும்.”
“நான் எதுக்கும்மா வேலைக்குப் போகணும்?”
“தொண தொணன்னு பேசாமல், குளிச்சிட்டு வா! “ என விரட்டி விட்டார்.
பாத்ரூம் கதவை மூடினாள். தண்ணீரைத் தலையில் ஊற்றினாள். அவள் அழுதாள்.
“பசங்களோட பேசக்கூடாது. சரி், குறைச்சுக்கலாம். அறிவியில் ஆசிரியர் சொல்லி இருக்காங்க, ‘இந்த வயசில் இனக் கவர்ச்சி வரும்’. ஜாக்கெட் எதுக்கு? அதில் அந்தப் பெரிய மனுசங்களுக்கு என்னவாம் ? அவர் கடைக்கு வேலைக்கு ஏன் போகணும்? “ என சிந்தித்தாள்.
எரிச்சலுடன் சோப்புத் தேய்த்தாள். நெஞ்சுக்குச் சோப்பு போட்டாள். கைகளைத் துழாவினாள். ஒரு சம்பவம் அவள் நினைவில் வந்தது.
சென்றவாரம் பாலு மாமா கடைக்குள் ஒளியச் சென்றாள். கடையின் பீரோவுக்கு பின் ஒளிந்தாள். அப்போது, அவரது கைகள் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் விமலா அக்காவின் கைகளைப் பிடித்து இருந்தன. அது தவறானத் தொடுதல்.
இப்போது அவள் அழத் தொடங்கினாள்.
அவளது கண்ணீர் தண்ணீரோடு மறைந்துவிடுமா? அவள் எப்போதும் போல் சிரித்து மகிழ்ந்திருக்க வழி உண்டா? மணிமொழிபோல் பலர் நம் வீதிகளில்... விடை தெரிந்தால் சொல்லுங்கள். இல்லை. ஓடிச் சென்று உதவுங்கள்.