கோவில்பட்டி, அக். 14- கோவில்பட்டி அருகே, நாலாட்டின்புத்தூர் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் நேர்ந்த சாலை விபத்தில் சிக்கி, தினபூமி நாளிதழ் உரிமையாளர் மணிமாறன் பலியானார். அவரது மகன் சதீஷ் படுகாயங்களுடன் கோவில்பட்டியில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்த மணிமாறன் (வயது 65) தினபூமி நாளிதழின் உரிமையாளர். இவர் திங்களன்று பிற்பகல் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் தினபூமி நாளிதழின் மூத்த உதவி ஆசிரியர் திருநாவுக்கரசு (70) உடல்நலக் குறைவால் காலமானதையடுத்து, அவரது இறுதிச் சடங்கிற்கு சென்று விட்டு மதுரை நோக்கி திரும்பி கொண்டிருந்தார். அப்போது, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, நாலாட்டின்புத்தூர் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் நேர்ந்த விபத்தில் சிக்கி மணிமாறன் பலியானார். அவருடன் பயணம் செய்த அவரது மகன் சதீஷ் படுகாயங்களுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் மதுரைக்கு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து நாலாட்டின்புத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.