tamilnadu

img

மதுரை: ரயில் தீ விபத்து - 5 பேர் மீது வழக்குப்பதிவு

மதுரையில் நடந்த ரயில் தீ விபத்து தொடர்பாக சுற்றுலா ஏற்பாடு செய்த தனியார் நிறுவன ஊழியர்கள் 5 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தென் மாநிலங்களில் ஆன்மீக சுற்றுலா வந்த ரயிலில் 180 பயணிகள் கடந்த 17-ஆம் தேதி தமிழகம் வந்துள்ளனர். இவர்கள் பல்வேறு ஆன்மீகத் தலங்களுக்கு சென்று விட்டு, கடைசியாக  திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் தரிசனத்தை முடித்து விட்டு, கடந்த 26-ஆம் தேதி அதிகாலை 5.15 மணி அளவில் மதுரைக்கு வந்தடைந்தனர். மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ தூரத்தில் மதுரை-போடி வழித்தடத்தில் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 9 பேர் பலியாகி உள்ளனர். 

ரயிலில் சமைத்து சாப்பிடுவதற்காக சமையல் எரிவாயு உருளைகள், 30 கிலோக்கும் அதிகமான விறகுகள், மண்ணெண்ணெய் அடுப்புகள் இருந்ததே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
ரயில் பெட்டியில் உள்புறமாக இருந்து கதவை பூட்டிவிட்டு, தேநீர் தயாரிக்க சமையல் எரிவாயு அடுப்பை பற்றவைக்கும்போது தீ விபத்து ஏற்பட்டதாக உயிர்த்தப்பிய பயணி தகவல் தெரிவித்தனர்.  இதன் அடிப்படையில் தீ விபத்து சம்பவம் தொடர்பாக சுற்றுலா நிறுவன ஊழியர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சத்ய பிரகாஷ், நரேந்திர கும்ஸ், கர்தீஸ் ஜஹானி, தீபக், சுபம் காஷியப் ஆகிய ஐந்து பேர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.