மூதாதையரின் கதையைச் சொல்லும் ‘கச்சேரி மாயக்கா’ - செ. தமிழ்ராஜ்
வாசிப்பு இயக்க த்தில் அறிமுகமான இனிய நண்பர் பொன். விக்ரமின் 10 ஆவது நூல் கச்சேரி மாயக்கா எனும் குறு நாவலாக ஒளிர்கிறது. தலைப்பே வித்தி யாசமாக இருந்தது. அது என்ன கச்சேரி, கச்சே ரிக்கும் மாயக்காளுக்கும் என்ன சம்பந்தம். நூலிற்குள் புகுந்தால் தான் தானே விளக்கம் கிடைக்கும், புகுந்தேன். அந்தக் காலத்தில் நீதிமன்றத்திற்கும் காவல் நிலையத்திற்கும் சென்று வருபவர்களை கச்சேரிக்கு போவதாக ஒரு அடைமொழியுடன் குறிப்பிடு வார்கள். இன்றும் கூட வீட்டிற்கு தாமதமாகவோ ஏதேனும் பிரச்சனையுடனோ போவோர் களை வீட்டிற்கு போ, இன்னைக்கு நல்ல கச்சேரி இருக்கு என்று சொல்லக் கேட்கிறோம். நாவலாசிரியர் பெருங்காமநல்லூர் துப்பாக்கிச் சூடு எனும் ஒரு அபாரமான கதைக்களத்தை பின்னிறுத்தி அதன் வழியே தனது மூதாதை பெண்ணொருத்தியின் கதையை புனைந்துள்ளார். மிக விரிவான நாவலாக வர வேண்டிய கதையை மிகச் சுருக்கமான குறுநாவலாக பிரம்மாண்டமான திரைப்படத்தின் முன்னோட்டமாக மிகச் சாதாரணமாக எழுதிக் கடந்துள்ளார். வாசிக்கும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மொத்தமே 5 காட்சிகள் மட்டுமே. மீதமுள்ள காட்சிகளை தேடி வாசக மனம் அலை பாய்கிறது. பொன். விக்ரம் ஏற்கனவே 500 பக்கங்களில் இரண்டு நாவலை எழுதி வெளியிட்டுள்ளார். அவருக்கு ஒன்றும் இது கடினமான காரியமில்லை. ஏனோ நேரம் எடுத்துக் கொள்ளாமல் சற்று அவசர கதியில் வெளியிட்டு விட்டாரோ என்று தோன்றுகிறது. மூதாதையை தேடி புத்தூர் என்ற புத்தனூர் மலைக்கு போகிறார். அங்கே தாத்தன் வீரணனையும் பாட்டி மாயக்காளை யும் அவர்களின் அருமை பெருமைகள் குறித்து ஒரிரு அத்தியாயங்களில் எழுதிக் கடந்துள்ளார். இதனால் அவர்கள் குறித்த சித்திரம் அழுத்தமாகப் பதிவாகவில்லை. அதே மாதிரி, சிறுமி வீரம்மாளின் துர்மரணம். அதனால் பழிக்கு பழிவாங்க 10 பேரை கொல்லும் வீரணன்,
அது குறித்த காட்சிகள் ஏனோ தானோவென்று அத்தியாயங் களை கடத்தியுள்ளார். வானம் பொய்த்ததால் உழவு வேலைகள் நின்று போய் பஞ்சம் தாங்காமல் களவிற்கு சென்று அநியாயமாய் செத்துப் போய் அனாதையாய் கிடக்கும் வீரணன் உடலை காவல்துறையினர் கைப்பற்றி ஊராரை சாட்சி சொல்ல அழைத்தால் எவரும் வாயை திறக்கவில்லை. காட்டிக் கொடுத்தால் ஊரே கைரேகை சட்டத்தில் உள்ளே போகும் என்ற நிலையில் வீரணன் மனைவி மாயக்காள் காவல் நிலையம் சென்று இறந்து கிடக்கும் கணவனை ஊர் நன்மைக்காக இல்லையென்று பொய் சொல்கிறாள். அந்த பொய்யால் ஊர் பழிச் சொல்லில் இருந்தும் ரேகைச் சட்டத்தி லிருந்தும் காப்பாற்றப்படுகிறது. அதன் பின்புலக் காட்சியாக பெருங்காம நல்லூர் படுகொலை மிகச் சுருக்கமாக விவரிக்கப்படுகிறது. காவல் நிலையத்தில் சாட்சி சொல்லும் மாயக்காள் நிலை குறித்து மிக உருக்கமாக விவரிக்கிறார். கவிநயத்துடன் கதையை நிறைவு செய்கிறார். ஏராளமான எழுத்துப் பிழைகள். அதிலும் என்னுரையில் அவரே சொல்லுகிறார், பதிப்பகத்தார் என்னுடைய இரண்டு நாவல்களை ஒரு புள்ளி கூட மாற்றாமல் பிரசுரம் செய்ததாக. புள்ளியை மாற்றாமல் இருக்கலாம், ஆனால் பிழைகளை சரி செய்யாமல் வெளியிடுவது மிகப்பெரிய பிழையே. அபாரமான எழுத்தாற்றலும் கதை சொல்லும் உத்தியும் தெரிந்த எழுத்தாளர் பொன் விக்ரம் விரைவாக இதன் தொடர்ச்சி யை விரிவாக எழுதி வெளியிடுவார் என்று நம்புகிறேன். எழுத்தாளருக்கு வாழ்த்துகள்.
கச்சேரி மாயக்கா (குறுநாவல்)
ஆசிரியர் : பொன் விக்ரம்
பக்கம் : 104
வெளியீடு : கெளரா பதிப்பகம்
விலை : ரூ.120
நந்தவனத்தில் பூக்கள் தேடி... - தென்றல்
தீக்கதிர் வண்ணக்கதிர் மூலமாக கலை இலக்கியாவின் கவிதைகளையும் சிறுகதைகளையும் வாசித்துள்ளேன். இரண்டிலுமே கிராமத்தின் வாசம் இயல்பான ஒன்றாக இருக்கும். பின்னொரு நாள் இவரின் இறப்புச் செய்தியை பேஸ்புக்கில் கண்டதும் அதிர்ச்சியாக இருந்தது. இந்நூல் அவர் இறப்பதற்கு முன்பு அவர் அனுப்பிய மின்னஞ்சலில் இருந்த கவிதைகள். இதற்கு முன்பு நான்கு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். அவற்றில் இரண்டு கிண்டிலில் கிடைக்கிறது. கலை இலக்கியா திருக்குறளின் காமத்துப்பாலை மையமாகக் கொண்டு எழுதிய கதைகளை “காமக் கடல் நீந்தி” எனும் தலைப்பில் விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது. கவிதைகளைப் பொதுவாக இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று எளிமையானவை. இன்னொன்று இருண்மையானவை. இரண்டும் கவிதையாகிறதா இல்லையா என்பதை அதன் நுட்பமே தீர்மானிக்கிறது.
இம்மூன்றும் ஒருசேர அமைந்தவை கலை இலக்கியாவின் கவிதைகள். பரிமாறி தென்னை ஊளையில் நள்ளிரவுப் பேயாடலில் சூரியன் அரண்டு கதகதப்பிற்காக அப்பளம் பொறிக்கிறான் எனது அடுப்படியில் வேர் பொசுக்கப்பட்ட ஒரு முன்னாள் தென்னையிலிருந்து குருவி பறக்கிறது புதிய சூரியனாய் பல்வேறு ஊகங்களுக்கு விட்டுச்செல்லும் இருண்மை இக்கவிதையில் இழையோடுகிறது. தலைகீழாய் குரங்குகள் கூடி விளையாடும் ஓர் அகன்ற அரசமரத்தில் தலைகீழாய்த் தொங்கும் வௌவால் நான் தொங்குகிறேன் நேராய் இருப்பதையெல்லாம் தலைகீழாக்குவோரைப் பார்த்துக்கொண்டே. எனக்கு அரசமரம் என்றதும் பவுத்தத்துக்கு பலி கொடுத்த மணிமேகலை-உதயகுமாரனின் காதலும். அதன் இதய வடிவ இலைகளும் ஞாபகம் வரும். இதைவிட அரசியல் சமூக நிலையைக் கூறும் கவிதை வேறெதுவாக இருக்க முடியும். துயரக் கரண்டி கவிதையில் வெட்டவெளிப் பாறையெனச் சாவற்ற பெருவெளியின் காதலென நாம் பாறைகள் இறுக்கமானவைதான் .. ஆனாலும் இரவில் குளிர்ச்சியானவை. உறங்கா விடியல் கவிதையில் இரண்டு அழகான படிமங்கள் இரவின் கூடலில் இடியெனச் சிரித்த நிலவின் பற்கள் சிதறிய வானின் மனதின் செயற்கைக்கோள் மௌனித்துக் கிடக்கிறது வாழ்வு குருட்டுப் பணக்காரன் முன்னால் கொலுசு இல்லா கால்களுடன் அநாதையாய் பரதமாடும் பசியில் கண்மங்கும் ஏழை முன்பு சேரமுடியாத துக்கத்தில் துடிதுடித்துச் செத்திருக்கும். சூரிய விதை பெண்களை இயற்கையுடன் சேர்த்த இதுவரை கண்டிடாத அபூர்வ பார்வை இரத்தம் விரட்டும் இதயத்தை எப்படி நம் நேசத்தின் சின்னமாக வைப்பது என்று கலை இலக்கியா கேட்கிறார்.
காதல் கவிதைகள் உன் நந்தவனத்தில் பூக்கள் தேடி வந்தேன் மலைப்பாம்பு என்னைச் சுற்றிக் கொண்டது என் ஓலம் கேட்டு நீ ஓடி வருவாய் என்றிருந்தேன் வெறிபிடித்த புலி ஒன்று நாவில் நீர் விட்டபடி வந்தது உன் மருந்து வார்த்தை தேடித் தப்பிவந்தேன் மௌன ஆயுதத்தோடு கடந்து என் தமனிகளில் விஷமேற்றுகிறாய் இனி என்னால் காதல் கவிதைகள் எழுத முடியாது. அதிலும் தமனி என்ற இடம்... இதயத்திலிருந்து ஆக்ஸிஜன் நிரம்பிய சுத்தமான இரத்தத்தை எடுத்துச் செல்பவை தமனிகளே. அசுத்தமான ரத்தத்தை இதயத்திற்கு எடுத்து வருபவை சிரைகள். இங்கு சுத்தமான ரத்தம் பாயும் தமனியில் விஷமேற்றுவது.. அதுதான் நுட்பமான சொற் பயன்பாடு. பக்கத்திற்கு பக்கம் முத்தான கவிதைகள். கலை இலக்கியாவின் அனைத்து கவிதைகளையும் தொகுத்து முழுத்தொகுப்பாக வெளியிட்டால் அது தமிழுக்கும் கவிதை எழுதுவோருக்கும் ஆகச் சிறந்த கொடையாகவும் முன் உதாரணமாகவும் இருக்கும். கலை இலக்கியாவின் நெருங்கிய வட்டம் தாண்டி யாரேனும் அவரின் பெயரையோ அவரின் கவிதை வரிகளையோ குறிப்பிட்டுப் பேசினாலோ எழுதினாலோ அவர்களுக்கு என் ப்ரியங்கள். ஏனெனில் நல்ல கவிதைகள் ஒருபோதும் கேட்பாரற்றுப் போய்விடக்கூடாது. கலை இலக்கியா (கவிதைகள்) வெளியீடு : நம் பதிப்பகம் பக்கம்-192/விலை-ரூ 190
கலை இலக்கியா (கவிதைகள்)
வெளியீடு : நம் பதிப்பகம்
பக்கம்-192/விலை-ரூ 190