“நடப்போம் நலம் பெறுவோம்” '
நடைபயிற்சியினை தொடங்கி வைத்த ஆட்சியர்
புதுக்கோட்டை, மே 4- பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் 8 கி.மீ. ‘நடப்போம் நலம் பெறுவோம்” ஆரோக்கிய நடை பயிற்சியினை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அவர் பேசும்போது, ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டத்தினை மாவட்ட அளவில் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களுக்கு 8 கி.மீ. நடைபயிற்சி மேற்கொள்வதை ஊக்குவித்து, நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய மருத்துவ முகாம்கள் சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆரோக்கிய நடைப் பயிற்சியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துகொண்டனர். மாவட்டத்தில் இதுவரை 16 ஆரோக்கிய நடைபயிற்சி மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன என்றார். இந்நிகழ்வில், புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட விளையாட்டு அலுவலர், வட்டாட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.