tamilnadu

img

வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு 13 இடங்களில் தாமதமாக தொடக்கம்

நாகர்கோவில், பிப்.19- கன்னியாகுமரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் வாக்குப்பதிவு சனியன்று (பிப்.19) காலை 7 மணி முதல் விறு விறுப்பாக நடைபெற்றது. 1,236 வாக்குச்சாவடிகளில்  வாக்குப்பதிவு நடைபெற்றது.  திட்டுவிளை, ஆரல்வாய்மொழி, இடைக்கோடு, மார்த்தாண்டம், உள்பட 13 இடங்களில் வாக்குப்பதிவு துவங்கியதும் மின்னணு எந்திரங்களில் பழுது ஏற்பட்டது. இதையடுத்து அந்த இடங்களில் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. குழித்துறை நகராட்சிக்குட்பட்ட 16-ஆவது வார்டுக்கான வாக்குப்பதிவு மார்த்தாண்டம் எல்.எம்.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இங்கு வாக்கு பதிவுக்கு கொண்டு வரப்பட்ட எந்திரம் பழுதடைந்து காணப்பட்டதால் வாக்கு பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. உடனடியாக அங்கிருந்த அதிகாரிகள் வாக்குச்சாவடி முகவர்கள் அனுமதியுடன் எந்திரத்தை சரி செய்தனர். அதன்பின்பு வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் அங்கு அரை மணி நேரம் வாக்குப்பதிவு காலதாமதமானது. இதுபோல் இடைக்கோடு பேரூராட்சியில் 2ஆவது வார்டில் வாக்குப்பதிவு எந்திரம் தொடக்கத்தில் செயல்படவில்லை, இதனையடுத்து அதனை சரிசெய்து மீண்டும் அங்கு வாக்குப்பதிவு தொடங்கியது. குமரி மாவட்டத்தின் மேற்கில் உள்ள தோட்டம் மற்றும் மலைப்பகுதிகளான திற்பரப்பு பேருராட்சிக்கு உட்பட்ட திருநந்திக்கரை, கடையல் பேரூராட்சி பத்துகாணி, அருமனை உள்ளிட்ட பகுதிகளில்  வாக்காளரகள் ஆர்வமுடன் காலை நேரத்தில் வாக்குச்சாவடிக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.