புதுதில்லி,அக்.15- உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா காரை ஏற்றி கொலை செய்தார். இதில் ஆசிஷ்மிஸ்ரா கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். லக்கிம்பூரில் விவசாயிகளை கொன்றதைக் கண்டித்தும் நியாயமான விசாரணை கோரியும் அக்டோபர் 18 ஆம் தேதியன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து பாரதிய கிசான் யூனியன் (BKU) தலைவர் ராகேஷ் திகாயத் செய்தியாளர்களிடம் கூறுகையில், லக்கிம்பூர் சம்பவத்திற்கு எதிராக அக்டோபர் 18 அன்று ஆறு மணிநேரம் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் . அக்டோபர் 26 அன்று லக்னோவில் பெரிய கிசான் பஞ்சாயத்து நடை பெறும். லக்கிம்பூர் வழக்கின் மீதான விசாரணையில் திருப்தி யில்லை. ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் சிவப்பு கம்பள வரவேற்புடன் கைது செய்யப்பட்டுள்ளார். இது விவசாயிகளிடையே கோபத்தை தூண்டியுள்ளது. ஆசிஸ் மிஸ்ராவின் தந்தை, ஒன்றிய அமைச்சரான அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட நபரின் தந்தை தொடர்ந்து நாற்காலியில் இருந்தால், இந்த வழக்கில் நியாயமான விசாரணையை எதிர்பார்க்க முடியாது என்று தெரிவித்தார்.