tamilnadu

புத்தகரம் கோவிலில் ஐம்பொன் சிலையை திருடிய வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

கும்பகோணம், மார்ச் 2- மயிலாடுதுறை அருகே சுவாமி சிலை திருடப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள புத்தகரம் கிராமத்தில் காமாட்சியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் இருந்த காமாட்சி அம்மன் உலோகச்சிலை கடந்த 2014 ஆம் ஆண்டு திருடு போனது. இதுகுறித்து குத்தாலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு, தமிழக சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.  இந்நிலையில் சிலை திருட்டு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மயிலாடுதுறை அருகே தாழஞ்சேரியைச் சேர்ந்த த.ரஜினி (46) தலைமறைவாக இருந்து வந்த நிலையில் அவரை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.  தலைமறைவாக இருந்த ரஜினியை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் திங்களன்று இரவு கைது செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ரஜினியை மார்ச் 15 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை யடுத்து போலீசார் அவரை கும்பகோணம் கிளை சிறையில் அடைத்தனர்.