tamilnadu

img

காவல்நிலைய சித்ரவதையால் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.30லட்சம் இழப்பீடு பெற்றுத் தந்த வழக்கறிஞர்

சென்னை, டிச. 28- நெய்வேலி காவலர்களின் சித்ரவதையால் உயிரிழந்த சுப்பிரமணி குடும்பத்திற்கு ரூ. 30 லட்சம் நஷ்ட ஈடு பெற்றுத் தந்த வழக்கறிஞர் எஸ். விஜயசங்கருக்கு கே. பாலகிருஷ்ணன் சால்வை அணிவித்து பாராட்டு  தெரிவித்தார். கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், பின்.என். பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரை  நெய்வேலி நகர காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்று, அடித்து சித்ரவதை செய்ததால்  உயிரிழந்தார். இவ்வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட வேண்டும், சம்பந்தப்பட்ட காவலர்கள் தண்டிக்கப்பட வேண்டும், அவரது மனைவி ரேவதிக்கு  உரிய இழப்பீடுகள் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு இயக்கங்களை முன்னெடுத்தது. நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தது.

மேலும் உயர்நீதிமன்றத்தில் இழப்பீடு கேட்டு  வழக்கறிஞர் விஜய்சங்கர் மூலம் ரேவதி வழக்குத் தொடுத்தார். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இறந்தவர் உயிரோடு இருந்தால் எவ்வளவு வருமானம்  பெற்றிருப்பார் என்பதைக் கணக்கீட்டு ரூ. 30 லட்சம்  நஷ்ட ஈட்டுடன், சம்பவம் நடந்த நாளிலிருந்து தீர்ப்பளித்த  தேதி வரை 6 சதவிகித வட்டியுடன் வழங்க வேண்டுமென முதன் முறையாக ஒரு சிறந்த தீர்ப்பை வழங்கி யுள்ளது. இத்தீர்ப்பை பெறுவதற்கு ரேவதி சார்பில்  ஆஜராகி திறம்பட வாதிட்ட வழக்கறிஞர் எஸ். விஜயசங்கர் அவர்களை கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் 27.12.2021 திங்கள் அன்று  நேரில் அழைத்து, சால்வை அணிவித்து தனது வாழ்த்துக் களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.