ஜூலை-9 அகில இந்திய பொது வேலைநிறுத்தம்
சாலையோர வியாபாரிகள் சங்கம் பங்கேற்க முடிவு
மன்னார்குடி, ஜுன் 27- ஜூலை-9 அகில இந்திய பொதுவேலைநிறுத்தத்தில் கடையடைப்பு செய்து முழுமையாக பங்கேற்பது என திருவாரூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. சங்கத்தின் மாவட்டப் பேரவை, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாவட்டத் தலைவர் எம்.பி.கே. பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இப்பேரவையை சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா. மாலதி துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஜி. ரகுபதி வேலை அறிக்கையையும், மாவட்டப் பொருளாளர் ஜி. முத்துக்கிருஷ்ணன் வரவு-செலவு அறிக்கையையும் முன் வைத்தனர். சிஐடியு மாவட்டதலைவர் எம்.கே.என். அனிபா, முறைசாரா தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் யு. ராமச்சந்திரன், சிபிஎம் நகரச் செயலாளர் ஜி. தாயுமானவன், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே. பிச்சைக்கண்ணு உள்ளிட்டோர் பேரவையை வாழ்த்திப் பேசினர். புதிய மாவட்டத் தலைவராக டி. ராமலிங்கம், மாவட்டச் செயலாளராக ஜி. ரகுபதி, மாவட்டப் பொருளாளராக எம்.ஜி. கதிரேசபாண்டியன் ஆகியோர் உட்பட ஏழு மாவட்ட நிர்வாகிகளும், 16 மாவட்டக் குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத்தின் புதிய நிர்வாகிகளை வாழ்த்தியும் ஜூலை 9 அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தின் முக்கியத்துவம் பற்றியும், மாநிலச் செயலாளர் பி. கருப்பையன் நிறைவுரையாற்றினார். நகர்மன்ற நிர்வாகம் விடுபட்டவர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்க வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு இலவசமாக தள்ளுவண்டி வழங்கிட வேண்டும். வங்கிகள் மூலமாக மானியத்துடன் கூடிய கடன் வழங்க வேண்டும். நலிவடைந்த சாலையோர வியாபாரிகளுக்கு இலவச வீட்டுமனை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.