tamilnadu

45ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

சென்னை, பிப். 5 - 45ஆவது சென்னை புத்தகக்காட்சி பிப்.16 முதல் மார்ச் 6 வரை நந்தனம் ஒய்எம்சிஏ வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்தப் புத்தகக்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இது தொடர்பாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் செயலாளர் எஸ்.கே.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி புத்தக்காட்சி நடைபெறும். புத்தகக்காட்சி அரங்கு 3.50 லட்சம் சதுர அடி பரப்பளவில் 800 அரங்குககள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. 500 பதிப்பாளர்கள் பங்குபெறுகின்றனர். ஏராளமான புதிய நூல்கள், நாவல்கள் விற்பனைக்கு வர உள்ளது. சுமார் ஒரு லட்சம் தலைப்பிலான புத்தகங்கள் புத்தகக்காட்சியில் இடம்பெற உள்ளன. புத்தகங்களுக்கு 10 விழுக்காடு கழிவு வழங்கப்படும். புத்தக்காட்சி காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெறும். நுழைவு கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படும். நுழைவுச் சீட்டுகளை BõA``ëSI.COM என்ற இணைதளத்தில் பணம் செலுத்தி  பெற்றுக் கொள்ளலாம். அனைத்து நாட்களுக்குமான நுழைவுச்சீட்டு 100 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் நுழைவுச் சீட்டுகள் கட்டணமின்றி வழங்கப்பட உள்ளது. கடந்தாண்டை போலவே இந்தாண்டும் குழந்தைகளுக்கென்று சிற்றரங்கம் அமைக்கப்படும்.

தமிழர்கள் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், தொல்லியல் துறை சார்பில் 5 ஆயிரம் சதுர அடியில் அரங்கு அமைக்கப்படுகிறது. போட்டிகள் புத்தக்காட்சியையொட்டி சர்வதேச அளவில் பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான இணைப்பு (லிங்க்) BõA``ëSI.COM ஆ இணையத்தில் உள்ளது. வயது வாரியாக நடைபெறும் இந்தப் போட்டியில் முதல் 3 இடங்களை பெறுவோருக்கு பரிசுகள் வழங்கப்படும். திருக்குறள் ஒப்புவித்தல், ஓவியம் வரைதல் ஆகிய போட்டிகளும் இணையம் வாயிலாகவே நடைபெறும். புத்தக்காட்சிக்கு வந்து புத்தகம் வாங்கி படித்து, அதை சிறப்பான முறையில் அறிமுகப்படுத்தும் மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. கலைஞர் பொற்கிழி விருது புத்தகக் காட்சி தொடக்கவிழா நிகழ்வில் 2022 ஆம் ஆண்டிற்கான முத்தமிழறிஞர் கலைஞர்  மு. கருணாநிதி பொற்கிழி விருதுக்கு  சமஸ் (உரைநடை), ப்ரஸன்னா ராமசாமி (நாடகம்), ஆசைத்தம்பி (கவிதை), அ. வெண்ணிலா (புதினம்), பால் சக்காரியா (பிறமொழி), மீனா கந்தசாமி (ஆங்கிலம்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பகச் செம்மல் விருது ச.மெ. மீனாட்சி சோமசுந்தரமும் (மணிவாசகர் பதிப்பகம்), பபாசி-யின் சிறந்த பதிப்பாளர் விருது ரவி தமிழ்வாணனுக்கும், சிறந்த புத்தக விற்பனையாளருக்கான பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பன் விருது, நாதம் கீதம் புக் செல்லர்ஸ் நிறுவனத்திற்கும், சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான கவிஞர் அழ. வள்ளியப்பா விருது திருவை பாபுவிற்கும், சிறந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனார் விருது முனைவர் தேவிராவிற்கும், சிறந்த பெண் எழுத்தாளருக்கான பதிப்பாளர் அம்சவேணி பெரியண்ணன் விருது பாரதி பாஸ்கருக்கும், சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை சு.முத்து விருது கு.வை.பாலசுப்பிரமணியனுக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகளை விருதாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்க நிகழ்ச்சியில் வழங்க உள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.  செய்தியாளர் சந்திப்பின்போது பபாசி துணைத்தலைவர் மயிலவேலன், பொருளாளர் குமரன், துணைச்செயலாளர் சுப்பிரமணி, நிர்வாகக்குழு உறுப்பனர் லொகநாதன், ஊடக தொடர்பாளர் சிராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.