திருச்சிராப்பள்ளி, மே 27- தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியனின் 34-ஆவது மண்டல மாநாடு டிஆர்இயு தலைவர் ஜி.சுகுமாறன் தலைமையில் திருச்சிராப்பள்ளியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. தோழர் தனபால் நினைவாக கொண்டுவரப்பட்ட மாநாட்டுக் கொடியை டிஆர்இயு தலைவர் ஜி.சுகுமாறன் ஏற்றிவைத்தார். முன்னதாக பொன்மலை தியாகிகள் நினைவிடத்திலிருந்து மறைந்த தோழர் ஆர்.உமாநாத் நினைவாக மாநாட்டு கொடிமரத்தை மத்திய சங்க துணைப் பொதுச் செயலாளர் சந்தானம் தலைமையில் தொழிலாளர்கள் கொண்டு வந்தனர். கொடிமரக் கயிறு நாகர்கோவிலிருந்து தோழர் கோலப்பன் நினைவாக சுசோபனன் தலைமையில் கொண்டு வரப்பட்டது. தோழர் என்.தனபால் நினைவாக மாநாட்டுக் கொடி சென்னையிலிருந்து துணைப் பொதுச் செயலாளர் ஹரிலால், தலைமையிலும் தோழர் சங்கரநாராயணன் நினைவு ஜோதி சென்னையிலிருந்து கே.பி.ஷகிலா தலைமையிலும் கொண்டு வரப்பட்டது. கண்ணூரிலிருந்து தோழர் அனந்தநம்பியார் நினைவு ஜோதியை துணைப் பொதுச் செயலாளர் மெஹபூப் அலி தலைமையில் கொண்டுவரப்பட்டது. மதுரையிலிருந்து தியாகி பந்தல் ராமசாமி நினைவு ஜோதி சங்க துணைப் பொதுச் செயலாளர் திருமலை அய்யப்பன் தலைமையில் எடுத்து வரப்பட்டது. மாநாட்டு தொடக்க நிகழ்வையொட்டி தொழிலாளர் பேரணி நடைபெற்றது. சாம்பசிவன் அஞ்சலி தீர்மானத்தை முன் மொழிந்தார். மாநாட்டுப் பிரதிநிதிகளை ரங்கராஜன் வரவேற்றார். டிஆர்இயு பொதுச் செயலாளர் பி.மேத்யூ சிரியாக் அறிக்கை சமர்ப்பித்தார். செயல்தலைவர் ஏ.ஜானகிராமன், இளங்கோ உள்ளிட்ட மத்திய சங்க நிர்வாகிகள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். மாநாடு சனிக்கிழமையும் தொடர்ந்து நடைபெறுகிறது.