இது மலைகளுக்கும் கூன் விழ வைக்கும் துயரம்.
- அன்னா அக்மதோவா
யார்தான் நினைத்திருக்க முடியும்
மலைகள் இடிந்துவிழும் என்று?
அது நம்ப முடியாதிருக்கிறது
ஆம் மலைகள் இடிகின்றன
மலைபோன்ற துயரங்கள்
நம் மேல் இடிந்து விழுகின்றன
ஒரு குட்டிச்சுவர் இடிவதுபோல
மலைகள் இடிந்து விழுந்த இரவில்
அடிவாரத்தில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள்
ஒரு பேய்க் கனவு கண்டனர்
மலைகள் பிசாசுகளாக எழுந்து வந்து
நீர்க் கரங்களால்
யாவற்றையும் தின்னும் கனவு
யாரோ கதவு தட்டினார்கள்
ஒரு பெண் தூக்கக் கலக்கத்தில்
எழுந்துபோய்
கதவைத் திறக்கிறாள்
பெரும் பாறை ஒன்று
அவளைத் தள்ளிக்கொண்டு
வீட்டிற்குள் பசியுடன் நுழைந்தது
தண்ணீரில் ஒரு கூழாங்கல்
அமிழ்வது போல
மண்ணுக்குள் ஒரு பள்ளிக்கூடம்
அமிழ்ந்து மறைகிறது
வீடுகள் மறைகின்றன
வாகனங்கள் மறைகின்றன
அவர்களின்
நாளை என்ற ஒரு பொழுது மறைகிறது
மனிதர்கள் புதைகின்றனர்
உயிருடன் ஒரு மகா சமாதியில்
கற்களாலான
மண்ணாலான
இடிபாடுகளாலான
நீராலான
ஒரு மாபெரும் சவப்பெட்டி
ராட்சத மழைத்துளிகள்
அதன் மேல் ஆணிகளாக
இறங்குகின்றன
மண்ணுக்குள் இருந்து
ஒரு மனிதன்
செல்போனில் அழைக்கிறான்
‘ நான் இங்குதான்
மண்ணுக்கடியில் இருக்கிறேன்
இன்னும் உயிரோடி இருக்கிறேன்
என்னைக் காப்பாற்றுங்கள்
பேட்டரி சார்ஜ் தீரப்போகிறது’
எங்கும் இடிபாடுகள்
எங்கும் பாறைக் குவியல்கள்
எங்கும் மரக் குவியல்கள்
எங்கும் தண்ணீர்
அவன் எங்கிருக்கிறான் என்பதை
அறிய முடியவில்லை
அந்த போன் அணைந்துவிட்டது
மறுமுனையில் மீட்புப் பணியில் இருந்தவன்
கையறு நிலையின் கசப்போடு
தன் செல்போனை
அந்த மகா கல்லறை நிலத்தில்
ஓங்கி அடிக்கிறான்
வேறொருவனை
இடிபாடுகளிலிருந்து
மீட்டுக்கொண்டிருக்கிறார்கள்
மண் வெட்டியால் மண்ணை
அகற்ற அகற்ற
அவன் உயிருடன் மேலே வருகிறான்
அவன் முகம் கொஞ்சம் கொஞ்சமாக
மேலே வருகிறது
அந்தக் காட்சி கர்ப்பத்திலிருந்து
ஒரு குழந்தை குருதிப் பெருக்கோடு
பிறந்து வருவதுபோலவே இருக்கிறது
பூமியே தின்னுகிறது
பூமியே பிரசவிக்கிறது
வெள்ள நிவாரண முகாம் ஒன்றில் இருந்தவர்கள்
அந்த இடத்தில் இப்போது இல்லை
அவர்கள் பூமிக்கு அடியில்
மேலும் பாதுகாப்பாக அனுப்பப்பட்டுள்ளனர்
ஒரு புதையுண்ட வீட்டில்
எல்லோரும் இறக்கிறார்கள்
தப்பிப் பிழைத்த ஒரு குழந்தை மட்டும்
இடிந்த இந்த உலகின் முன்
மலங்க மலங்க விழித்துக்கொண்டிருக்கிறது
அது இனி வாழ்நாள் முழுக்க
இந்தக் கதையைக் கேட்டுக் கேட்டு
கொடும் கனவுடன் வளரும்
இருப்பவர்கள்
மரித்தவர்களிடம்
நியாயம் கேட்டு
மார்பில் அடித்துக்கொண்டு
அழுகிறார்கள்
கண்ணீர் பேய் மழையாக
எங்கும் பெருகிக்கொண்டிருக்கிறது
சிவப்பு எச்சரிக்கைகள்
மஞ்சள் எச்சரிக்கைகள்
அழிவில் குளிர்காயும்
அரசியல் வக்கிரங்கள்
நிவாரணங்கள்
சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றிய
தொலைக் காட்சி விவாதங்கள்
எல்லாம் வழக்கம்போல
ஒரு சம்பிரதாயம்போல நிகழ்கின்றன
இவற்றின் நடுவே புதைகுழியிலிருந்து
ஒரு உடல் இறப்பதற்கு முன்
உடுத்தியிருந்த துணியாலேயே
கட்டித் தூக்கப்படுகிறது
பிணக்கிடங்குள் நிரம்பி வழிகின்றன
மேலும் மேலும் அங்கே
புதிய விருந்தினர்கள்
வந்துகொண்டேயிருக்கிறார்கள்
எண்ணிக்கைகள்
உயர்ந்துகொண்டேயிருக்கின்றன
இன்னும் எண்ணப்படாதவர்கள்
பூமிக்கு அடியில்
தங்கள் ஆதார் அட்டையுடன் படுத்திருக்கிறார்கள்
ஜீவிதத்தில் கண்டிடாத
மஹா பிரளயத்தில்
அங்கு வாழ்ந்த ஒருவரையும்
காண முடியாத நிலம் ஒன்று
எல்லாவற்தையும் விழுங்கிவிட்டு
அங்கே மல்லாந்து கிடக்கிறது
இடிந்த வீடொன்றின்
காணொளியைக் கண்டேன்
அனைவரும் மரித்துபோன
வீட்டின் சுவரில் யேசுவின் படம் ஒன்று
கீழே விழாமல் பத்திரமாக தொங்கிக்கொண்டிருக்கிறது
தெய்வங்கள் கல்லாய் உறைந்திருக்கின்றன
பிரார்த்தனைகள் மெழுகாய் உறைந்திருக்க்கின்றன
மலைகள் இடிகின்றன
மலைபோன்ற துயரங்கள்
நம் மேல் இடிந்து விழுகின்றன
மனுஷ்ய புத்திரன்
31.7.2024