கண்ணில்பட்ட தனது தூதர்களை
கதாயுதத்தால் விரட்டி விரட்டி
அடித்தான் எமதர்மன்
தர்மராஜனுக்கு இத்தனை கோபமா!
விளங்காமல் விழிபிதுங்கி நின்றனர்
தூதர்கள்
கொஞ்சம் கொஞ்சமாக சினம்
தணிய
சிம்மாசனம் சென்றமர்ந்தான்
மகிஷ வாகனன்
நிதானம் பெற்றுவிட்டான் நீதிதேவன்
என்பது உறுதியானதும்
தூதர்கள் கேட்டனர் தயக்கத்தோடு
‘பிரபோ! தங்களின் கோபத்திற்குக்
காரணம் எதுவோ!’
இப்படி இருந்தது இருள்நிறத்தான்
பதில்
‘நான் இந்துக் கடவுள்!
எனது ஏவலர்களாகிய நீங்களும்
இந்துக்களே!
நமது செயற்பாடுகள்
நமது அதிகார எல்லைக்குள்தான்
நிற்க வேண்டும்
உங்களை நம்பி இத்தனை காலம்
கவனிக்காமல் இருந்துவிட்டேன்
நீங்கள் பிடித்துவரும் உயிர்கள் சில
முஸ்லிம்களுடையனவாகவும்
கிறித்தவர்களுடையனவாகவும்
வேறுசில மதத்தவருடைனவாகவும்
இருக்கின்றன
இது பூமியைப் போல
எமலோகத்திலும்
மதக்கலவரங்களை
ஏற்படுத்திவிடக் கூடும்
அத்தகைய உயிர்களை உடனே
அவரவர் மதத்து மரணலோகங்களில்
சேர்த்துவிட்டு வந்துவிடுங்கள்’
மனோந்திரா