பழைய பல்லவன் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நீர்வளத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ஆய்வு
மயிலாடுதுறை, மே 26- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் கத்திரிமுல்லை கிராமத்தில் பழைய பல்லவன் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை நீர்வளத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ஜெ. ஜெயகாந்தன் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, நீர்வளத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ஜெ. ஜெயகாந்தன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: நீர்வளத் துறையின் சார்பாக 12 டெல்டா மாவட்டங்களில் 5,021 கிலோமீட்டர் நீளத்திற்கு கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கண்காணிக்க கண்காணிப்பு பொறியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். ரூ.98 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 3,700 கிலோ மீட்டர் பணிகள் தற்போது வரை நிறைவேற்றப்பட்டுள்ளன. பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எஞ்சியுள்ள பணிகள் ஒரு வாரத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக, 860 பொக்லைன் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் உள்ளன. பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடைமடை பகுதிகளுக்கும் நீர் செல்வதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கும் ஒரே நேரத்தில் நீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ், பாசன ஆதாரங்களை தூர்வாருவதற்கான அரசாணையின்படி, மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் காவிரி டெல்டா மாவட்டங்களில் தங்குதடையின்றி சென்றடையவும், வெள்ள காலங்களில் விரைவில் வெள்ளநீர் வடியவும் ஏதுவாக 2025-26 ஆம் ஆண்டு தஞ்சாவூர் கீழ் காவிரி வடிநில வட்டம், மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களில் 80 எண்ணிக்கையில் 965.65 கி.மீ நீளத்திற்கு 1132.88 லட்ச மதிப்பீட்டில் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் காவிரி வடிநில கோட்டம் (கிழக்கு), மயிலாடுதுறை, மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களில் 72 எண்ணிக்கையில் 926.25 கி.மீ நீளத்திற்கு 1075.10 லட்ச மதிப்பீட்டில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம், பெருமாள்கோயில் கிராமத்தில் மகிமலையாற்றின் தொலைவு 116.500 கி.மீ முதல் 119.000 கி.மீ வரை மற்றும் நச்சினார்குடி, கத்திரிமுல்லை கிராமத்தில் வீரசோழன் ஆற்றின் இடது கரையில் தொலைவு 113.960 கி.மீ.ல் பிரியும் பல்லவன் வாய்க்காலில் நடைபெறும் சிறப்பு தூர்வாரும் பணிகளை மே 30 ஆம் தேதிக்குள் விரைந்து முடிக்க நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ஆர். தயாளகுமார், கீழ் காவேரி வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளர் எம்.சண்முகம், ஒருங்கிணைப்பு அலுவலரும் கண்காணிப்பு பொறியாளருமான திருமலைக்குமார், காவேரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் மாரிமுத்து, உதவி செயற்பொறியாளர்கள் ரபீந்திரன், அன்புச்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.