tamilnadu

img

2025-இல் இந்தியாவின் வளர்ச்சி குறையும்!

புதுதில்லி, நவ.16- 2025-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி விகிதம் குறையும் என்று மூடிஸ் (Moody’s) நிறுவனம் கூறியுள்ளது. சர்வதேச நிதிச்சேவை நிறுவனமான மூடிஸ், ‘2025-26-இல் உலகப் பொருளாதாரம்’ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், “கடந்தாண்டை ஒப்பிடுகையில் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிலையான ஜிடிபி 6.7 சதவிகிதமாக வளர்ச்சியடைந்துள்ளது. அதிக முதலீடு, வலுவான உற்பத்தி திறன் மற்றும் வீட்டு நுகர்வு உயர்வு போன்றவையால் நிலையான ஜிடிபி வளர்ச்சியடைந்துள்ளது. மேலும், மிதமான பணவீக்கம் காரணமாக நிகழாண்டு இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) வளர்ச்சி 7.2 சதவிகிதமாக சிறப்பான நிலையில் உள்ளது. எனினும், 2025-ஆம் ஆண்டில் இது 6.6 சதவிகிதமாகவும் 2026-இல் 6.5 சதவிகிதமாகவும் குறையும்” என்று கூறியுள்ளது. காய்கறிகளின் விலை உயர்வால் கடந்த ஓராண்டில் முதல்முறையாக கடந்த அக்டோபர் மாதத்தில், நாட்டின் மொத்தவிலைப் பணவீக்கம் 6.2 சதவிகிதமாக உயர்ந்தது. பணவீக்க அளவை 4 சதவிகிதம் என்ற கட்டுக்குள் வைக்க ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்திருந்தது. அதைத் தாண்டி பணவீக்கம் சென்றுவிட்டது. இருப்பினும், கடந்த மாதம் நடைபெற்ற நிதிக் கொள்கை குழுக் கூட்டத்தில் வங்கிகளுக்கான குறுகிய கால கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் ரிசர்வ் வங்கி மேற்கொள்ளவில்லை.  ஆனால், பணவீக்கம் மற்றும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி, அடுத்த ஆண்டு வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புள்ளது என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.