அருமனை, அக்.17 குழித்துறை ஆறுகாணி சாலை வழியாக மாவட்டத்தின் 20க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இரு நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது.. இதனால் கோதையாற்றிலும் வெள்ளபெருக்கு ஏற்பட்டு களியல் பகுதியில் சாலை எது? ஆறு எது ? என்று அடையாளம் தெரியாத அளவுக்கு சாலைகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.சனிக்கிழமை மாலை முதல் அப்பகுதி வழியாக இயங்கும் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டது. மாலையில் திடீரெனபேருருந்துகள் நிறுத்தப்பட்டதால் மலையோர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அருமனை, மேல்புறம், குழித்துறை பகுதிகளில் கூலிவேலைக்கு சென்றவர்கள் மிகவும் வேதனைக்குள்ளாகி உள்ளனர். களியல் சந்திப்பின் அருகே வாகனங்கள் செல்லாமல் இருக்க காவல்துறையினர் வேலி போட்டுள்ளனர். சாலையில் வாகனங்கள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் காணப்பட்டது. தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் ஆட்கள் மூழ்கும் அளவிற்கு சாலை இருந்த இடமே தெரியாமல் முழுவதும் ஆறாக காட்சியளிக்கிறது. களியல் பகுதியில் கோதை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களின் வீடுகளை சுற்றியிருந்த தண்ணீர் தற்போது வீட்டுக்குள்ளும் புகுந்துள்ளது.திற்பரப்பில் இயற்கை அழகுகளை மூடும் வகையில் தண்ணீர் பாய்ந்து செல்வதால் கடல் அலைபோல் காட்சியளிக்கிறது. இதனை பல பகுதியிலிருந்து பொதுமக்கள் குடும்பமாக வந்து கண்டு களித்து செல்கின்றனர். இச்சாலை வழியாக இரண்டாவது நாளாக பேருந்துகள் மற்றும் வாகனங்கள் இயங்கவில்லை.