அரியலூர், நவ.29- ஜெயங்கொண்டம் அருகே துவக்கப்பட உள்ள சிப்காட் தொழிற்சாலையில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர் மாவட்ட மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர் மாவட்ட ஒன்பதாவது மாநாடு நவம்பர் 29 அன்று வாலாஜாநகரத்தில் நடைபெற்றது. ஜெயங்கொண்டத்திலிருந்து எஸ்.என். துரைராஜ் மூலம் கொண்டுவரப்பட்ட மாநாட்டுக்கொடியை மாவட்டக்குழு உறுப்பினர் பி.துரைசாமி ஏற்றி வைத்தார். மூத்த தோழர் சிற்றம்பலம் வரவேற்றுப் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரை.அருணன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் கொள்ளிடத்தில் வாழ்க்கை மற்றும் குருவாடி தலைப்பு ஆகிய இடங்களில் தடுப்பணை அமைத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும். ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட பொன்னேரியை ஆழப்படுத்தி ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயன்பெறும் வகையில் புள்ளம்பாடி வாய்க்கால் திட்டத்தை இணைக்க வேண்டும். கும்பகோணத்தில் இருந்து ஜெயங்கொண்டம் வழியாக அரியலூர், பெரம்பலூர், ஆத்தூர், சேலத்திற்கு புதிய ரயில் பாதை அமைத்து ரயில்வே போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும். உடையார்பாளையம், செந்துறை, ஆண்டிமடம் ஆகிய வட்டாரங்களில் தைல மரங்கள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளதால் ஜெயங்கொண்டம் பகுதியில் காகித ஆலை ஏற்படுத்தி அப்பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும், செந்துறை வட்டத்தில் சுண்ணாம்புக்கல் பிரச்சனை காரணமாக தரமான குடிநீர் கிடைக்காததால் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஜெயங்கொண்டம் அருகே துவக்கப்பட உள்ள சிப்காட் தொழிற்சாலையில் மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரியலூர் ஒன்றிய செயலாளர் அருண்பாண்டியன் தீர்மானங்களை முன்மொழிந்தார்.