tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

களத்தூர் ஊராட்சியில்  அங்கன்வாடி புதிய  கட்டடம் கட்ட  அடிக்கல் நாட்டு விழா

தஞ்சாவூர், மே 12-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள களத்தூர் ஊராட்சி, சித்துக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் (2025-26) இன்கீழ், ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆலோசனை கூட்டம்

திருச்சிராப்பள்ளி, மே 12-  தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருச்சிராப்பள்ளி புறநகர் மாவட்டக்குழு அலுவலகத்தில் அகில இந்திய வேலை நிறுத்தம் மற்றும் மறியல் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க புறநகர் மாவட்டச் செயலாளர் நடராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் வெகுஜன அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கூட்டுவது. கோரிக்கைகளை விளக்கி பொது மக்களிடத்தில் பிரச்சாரம் செய்வது. மே 20 ஆம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தம் அன்று அனைத்து ஒன்றியங்களிலும் வெகுஜன அமைப்புகளின் சார்பாக மறியல் போராட்டம் நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிஐடியு, வி.ச, வி.தொ.ச, வாலிபர், மாதர் சங்கம், மாற்றுத்திறனாளிகள் அமைப்பு ஆகிய சங்கங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பாகவத மேளா நாட்டிய  நாடக மஹோத்சவம்

பாபநாசம், மே 12-  தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூரில் பாகவத மேளா நாட்டிய நாடக மஹோத்சவம் நடைபெற்றது.  தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே துவக்கி வைத்தார். சென்னை கலாசேத்ராவின் முன்னாள் இயக்குநர் ரேவதி, குச்சிப்புடி நடனக் கலைஞர் கலா ரத்னா சத்திய நாராயணா, சென்னை சமஸ்கிருத கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் தேவி பிரசாத் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். ருக்மிணி கல்யாணம் என்ற நாடக வடிவ புத்தகத்தின் முதல் பிரதியை பாபாஜி ராஜா போன்ஸ்லே பெற்றுக் கொண்டார். ப்ரஹ்லாத சரித்திரம் நாட்டிய நாடகம் நடந்தது. முன்னதாக அறங்காவலர் தொழிலதிபர் ராமச்சந்திரன் வரவேற்றார். ஏற்பாட்டினை கலைமாமணி மஹாலிங்கம் செய்திருந்தார்.

மே 15: விவசாயிகள்  குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தூத்துக்குடி, மே 12- தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 15ஆம் தேதி ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் நடைபெற உள்ளது. 2025-ஆம் ஆண்டு மே மாதத்திற்கான ‘விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மே 15 வியாழனன்று காலை 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் “முத்து அரங்கத்தில்”  நடைபெற உள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

தஞ்சாவூர், பட்டுக்கோட்டையில் செவிலியர் தினம் 

தஞ்சாவூர், மே 12-  தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் திங்கட்கிழமை உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.  ஒவ்வொரு ஆண்டும் மே 12 ஆம் தேதி “கை விளக்கேந்திய காரிகை” என்று அழைக்கப்படும் பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினத்தை நினைவு கூறும் வகையிலும், நோயாளிகளுக்கு சேவை செய்யும் செவிலியர்களை கவுரவிக்கும் வகையிலும் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி திங்கள்கிழமை தஞ்சாவூா் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. “செவிலியர்களை பராமரிப்பது பொருளாதாரங்களை வலுப்படுத்துகிறது” என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு செவிலியர் கண்காணிப்பாளர் நிலை-1 (பொறுப்பு) மலர் தலைமை வகித்தார். செவிலியர் கண்காணிப்பாளர்கள் நிலை-2 ஜெயலலிதா, சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து அனைவரும் கேக் வெட்டி செவிலியர் தினத்தை கொண்டாடினர். இதில் அனைத்து செவிலியர்களும் கலந்து கொண்டனர். முன்னதாக ஞாயிற்றுக்கிழமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலசுப்ரமணியன் தலைமையில் பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பட்டுக்கோட்டை  உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் ஒன்றிணைந்து கேக் வெட்டி, செவிலியர் தின உறுதிமொழி ஏற்றனர். பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நடந்த இந்த விழாவில் முதலில் செவிலியர்கள் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து  ஊழியர் சங்க பேரணி, கூட்டம்

திருத்துறைப்பூண்டி, மே 12-  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பேரணி மற்றும் பேரவை நடைபெற்றது.  திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் பி.எஸ்.ஆர். நினைவு மண்டபத்தில் பேரணி தொடங்கி, நகரத்தின் முக்கிய சாலை வழியாக தியாகி சிவராமன் நினைவிடத்தில் நிறைவடைந்தது. பிறகு சங்கத்தின் கொடியேற்றப்பட்டது.  நிகழ்விற்கு தலைவர் ஏ. கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் கே. ஐயப்பன் கொடியேற்றினார். துணை பொதுச் செயலாளர் எம். ராமகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினார். துணை பொதுச் செயலாளர் எம்.மோகன் வரவேற்புரை ஆற்றினார். சம்மேளன துணைத் தலைவர் எம். கண்ணன் துவக்க உரையாற்றினார். பொதுச் செயலாளர் எஸ்.ஆர். இராஜேந்திரன் அறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் எஸ். வைத்தியநாதன் வரவு - செலவு கணக்கு வைத்தார். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஏ. கோவிந்தராஜ் தலைவராகவும், எஸ். வைத்தியநாதன் பொதுச் செயலாளராகவும், என். பாரதிமோகன் பொருளாளராகவும், எம். மோகன் துணை பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வேங்கைவயல் வழக்கு விசாரணை: மே 20-க்கு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை, மே 12-  புதுக்கோட்டை வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை, வரும் மே 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி காவல்துறையினர், அதே கிராமத்தைச் சேர்ந்த காவலர் முரளிராஜா மற்றும் முத்துக்கிருஷ்ணன், சுதர்சன் ஆகிய 3 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் மன்றம் 2-இல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த ஏப். 23 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டு, திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் நீதி்மன்றத்தில் ஆஜராயினர். வழக்கு விசாரணையை வரும் மே 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவர் ஜி. அற்புதவாணன் உத்தரவிட்டார்.