வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்
திருவாரூர், ஏப்.25- வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மாநிலம் தழுவிய ஒரு மணி நேரத்திற்கு முன்பு வெளிநடப்பு மற்றும் மாவட்ட, வட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாவட்டச் செயலாளர் விஜய் ஆனந்த், தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிணைப்பு மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் வருவாய்த்துறை, நில அளவைத் துறை உள்ளிட்ட அனைத்து நிலையான அலுவலர்களுக்கும் சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். திறம்பட பணி மேற்கொள்ள வருவாய்த் துறையில் உள்ள அனைத்து நிலையிலான காலிப் பணியிடங்களையும் விரைந்து நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகள் இதில் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொருளாளர் சோமசுந்தரம், மாவட்ட நிர்வாகிகள் பாஸ்கர், ஸ்ரீதர் கண்டன உரை நிகழ்த்தினார். மேலும், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் மகேஷ் மாவட்டப் பொருளாளர் ஜெயக்குமார், மாவட்டத் துணைத் தலைவர் கணேஷ், மாவட்ட இணை செயலாளர்கள் சத்திய பிரகாஷ், முகேஷ், ஞானபிரகாஷ் மற்றும் நில அளவை ஒன்றிணைப்பு மாவட்ட நிர்வாகி மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.