கரூர்,ஏப்.2- தமிழ்நாட்டில் சிறு, குறு, நடுத்தர தொழில்களை பாதுகாப்பதில் மாநில அரசு கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடவூர் வட்டக்குழு சார்பில் நிதியளிப்பு பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. இதற்கு முன்னதாக கட்சி யின் கரூர் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: நாட்டில் பாஜகவின் ஆட்சி எல்லை தாண்டிய ஆபத்தை நோக்கிச் செல்லும் ஆட்சியாக உள்ளது. குறிப்பாக மக்களவை தொடங்கிய நாள் முதல் ஒரு நாள் கூட முழுமையாக கூட்டத்தை நடத்த விடாமல் பாஜக முடக்கியுள்ளது. அதானி ஊழல் முறைகேடு, சொத்துக்குவிப்பு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்பது தான் எதிர்க்கட்சியினரின் கோரிக்கை. ஆனால் அதைப்பற்றி விசாரிக்காமல், மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டைக்கூட விவாதிக்காமல் அவசர, அவசரமாக நிறைவேற்றக்கூடிய நிலையை பாஜக கடைப்பிடித்து வருகிறது.
சுங்கச்சாவடியில் 10 மடங்கு கட்டண உயர்வு கொண்டு வந்து ஆங்காங்கே போராட்டம் நடக்கிறது. கரூர் உள்பட மேற்கு மாவட்டங்களில் ஜவுளித்தொழிலே முடங்கிவிட்டது. சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். தமிழக பட்ஜெட்டில் மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம், மகளிருக்கான உரிமைத்தொகை அறிவிப்பு, ஓய்வு பெற்ற போக்குவரத்து பணியாளர்களுக்கு பணப்பயன்களை வழங்க நிதி ஒதுக்கி யிருப்பது ஆகியவற்றை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அதே சமயத்தில் புதிய தாராளமயக் கொள்கையின் அடிப்படையில் நிதி யமைச்சரின் கருத்துக்கள் உள்ளன. இது தமிழகத்தின் வளர்ச்சிக்கு பயன்படாது. தமிழகத்தில் சிறு, குறு தொழில், நடுத்தர தொழில்களை பாதுகாப்பதில் அக்கறை காட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா, மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, கரூர் மாநகர செயலாளர் எம்.தண்டபாணி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.ஹோசிமின், எஸ்.பி.ஜீவானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். - ந.நி.