இந்திய கட்டுமானத் தொழிலாளர் சம்மேளனத்தின் 10- வது அகில இந்திய மாநாடு அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் பிப்ரவரி 11-13-ல் நடைபெற்றது. மோடி தலைமையிலான பாஜக ஒன்றிய அரசு மூர்க்கத்தனமாக பின்பற்றுகிற நவீன தாராளமய கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்துவது என மாநாடு உறுதி ஏற்றுள்ளது. கட்டுமான தொழிலாளர் உள்ளிட்ட தொழிலாளி வர்க்கம் ஆட்சியாளர்களின் கார்ப்பரேட், மதவாத கூட்டை முறியடிக்கும் வகையில் நேரடியான களப் போராட்டங்களை கட்டவிழ்த்து விட மாநாடு அறைகூவல் விடுத்தது.
தொழிலாளர்களின் உணர்வு மட்டத்தை உயர்த்தவும், போராட்டங்களை கூர்மைப்படுத்தவும், போராடி பெற்ற கட்டுமான தொழிலாளர்களின் உரிமைகள், சட்ட பாதுகாப்பை பலப்படுத்தவும் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல மாநாடு தீர்மானித்தது . தபன்சென் அழைப்பு பிப்ரவரி 10-ல் சுமார் 10,000 தொழிலாளர் பங்கேற்ற பொதுக்கூட்டத்துடன் தொடங்கிய இம்மாநாட்டில் சிஐடியு அகில இந்திய பொதுச் செயலாளர் தபன் சென் உரையாற்றினார். அப்போது, ‘‘கட்டிட, கட்டுமான தொழிலாளர் சட்டம், 1996 மற்றும் மாநிலங்களுக்கிடையே புலம்பெயர் தொழிலாளர் சட்டம், 1979 நலவரி சட்டம் ஆகிய சட்டங்களை, தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளுடன் இணைத்து, பாஜக அரசு, கட்டுமான தொழிலாளர்களின் உரிமைகளை நீர்த்துப்போக செய்துள்ளது; கட்டுமான தொழிலாளர் நல வாரியங்களை பலவீனப்படுத்தியுள்ளது; பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் நல வாரியங்களில் தேங்கியுள்ளது. கார்ப்பரேட் கட்டுமான கம்பெனிகள் பெருமளவில் நலவரி ஏய்ப்பதை ஒன்றிய அரசும், பல மாநில அரசுகளும் ஊக்குவிக்கின்றன. இதை எதிர்த்து ஒவ்வொரு கட்டுமான தொழிலாளியும் போர்க்குணமிக்க போராட்ட களத்தில் இறக்க நாம் உறுதி ஏற்க வேண்டும். பாஜக ஒன்றிய அரசு தொழிலாளி வர்க்கத்தின் நியாயமான கோரிக்கைகளை காது கொடுத்து கேட்க கூட தயார் இல்லை. நாட்டை விற்க அனுமதிக்க மாட்டோம் என தில்லி மாநகரில் ஏப்ரல் 5-ல் தொழிலாளர், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர் லட்சக்கணக்கில் திரண்டு போராட உள்ளனர். கட்டுமான தொழிலாளர் பெரும் திரளாக டெல்லி பேரணியில் பங்கேற்க வேண்டும்’’ என அவர் அழைப்பு விடுத்தார்.
வரவேற்பு குழு தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உத்தப் பர்மன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சுக்பீர் சிங், வி.சசிகுமார், திபஞ்சன் சக்கரவர்த்தி, மனோரஞ்சன் தாலுக்தார் எம்எல்ஏ மற்றும் அசாம் மாநில சிஐடியு பொதுச் செயலாளர் தபன் சர்மா ஆகியோர் பேசினர். சிஐடியு தேஅகில இந்திய தலைவர் கே.ஹேமலதா, சிஐடியு பொருளாளர் எம். சாய் பாபு, தேசியச் செயலாளர் ஸ்வதேஷ் தேவ் ராய் மற்றும் காஷ்மீர் சிங் தக்கூர் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர். பிரதிநிதிகள் மாநாட்டில் தோழர் சுக்பீர் சிங் கொடியேற்றினார். தியாகிகளுக்கு மலர் அஞ்சலி செலுத்திய பின்னர், தோழர் கே.வி.ஜோஸ் நினைவு அரங்கில் மாநாடு நடைபெற்றது. மறைந்த தோழர்கள் விஸ்வேஸ்வர் பஸ்வான் மற்றும் அஜித் முகர்ஜி நினைவு மேடையில் தலைவர்கள் அமர்ந்தனர். வரவேற்பு குழு தலைவர் உத்தப் பர்மன் உரையாற்றினார். சிஐடியு தலைவர் ஹேமலதா மாநாட்டில் துவக்க உரையாற்றினார். அஞ்சலி தீர்மானத்தை ஆர்.சிங்காரவேலு முன்மொழிந்தார். பொதுச்செயலாளர் சசிகுமார் இரண்டு பகுதிகளாக தனது அறிக்கையை முன்மொழிந்து பேசினார். முதல் பகுதியில் முதலாளித்துவம் சந்தித்து வரும் நெருக்கடி, வளரும் சமத்துவமின்மை, பசி, வேலையின்மை, ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகள் ,வளர்ச்சி பாதையில் தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களின் வளர்ந்து வரும் போராட்டங்கள், நாட்டின் தற்போதைய பொருளாதார, அரசியல், சமூக நிலைமைகள், சம்மேளனத்தின் ஸ்தாபன நடவடிக்கைகள் குறித்து பேசினார். அமைப்பின் வளர்ச்சி, போராட்டங்களில் பங்கேற்பு குறித்து சுய விமர்சன அடிப்படையில் பரிசீலிக்க வேண்டும் என்றார்.
இரண்டாவது பகுதியில் கட்டுமான தொழில் குறித்து விரிவாக பேசினார். இந்தியாவில், விவசாயத்திற்கு அடுத்தபடியாக, கட்டுமானத் தொழிலில் ஏழு, எட்டு கோடி பேர் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11 சதவிகிதம் கட்டுமான தொழில் பங்கு வகிக்கிறது எனக் குறிப்பிட்டார். பொருளாளர் அறிக்கையை ஷீலா அலெக்ஸ் முன்மொழிந்தார். 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 42 பிரதிநிதிகள் விவாதத்தில் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து பிரபாகரன், ரூபி, சுரேஷ்குமார் ஆகியோர் விவாதத்தில் பங்கேற்றனர். நிர்வாகிகள் தேர்வு மாநாட்டில், கட்டுமான தொழிலாளர் சம்மேளன 38 நிர்வாகிகளும், 132 நிர்வாகக் குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக கே.ஹேமலதா, பொதுச்செயலாளராக யு.பி.ஜோசப், பொருளாளராக மன்னாரம் ராமச்சந்திரன் தேர்வாகினர். தமிழகத்தில் இருந்து ஆர் சிங்காரவேலு, ரூபி துணைத் தலைவர்களாகவும், கே.பி.பெருமாள், டி.குமார் செயலாளர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்திலிருந்து சி.சுப்பையா, ஈடிஎஸ்.மூர்த்தி, பி.லூர்துசாமி,கே.ராமர், க.பிரபாகரன், கிருஷ்ணமூர்த்தி, சி.ஆர்.ராஜா முஹம்மது, ஆலிவர் பிரைட், சொ.மாரியப்பன், வேலம்மாள் ஆகியோர் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.